இயக்குநர், நடிகர், பாடலாசிரியர் எனப் பன்முகத் திறமை கொண்ட டி.ராஜேந்தர் கடந்த 19 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மேலும் டி. ராஜேந்தருக்கு வயிற்றில் சிறிய ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதால் மேல் சிகிச்சை தர வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாகவும், அதனால் மருத்துவர்களின் அறிவுரையின் படி சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதாகவும் அவரின் மகன் சிம்பு சமீபத்தில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் டி.ராஜேந்தர் உயர் மருத்துவ சிகிச்சைக்காக இன்று அமெரிக்கா செல்லவுள்ளார். அதற்காக சென்னை விமான நிலையம் வந்த டி. ராஜேந்தர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்., "விதி, இறைவனை மீறி எதுவும் நடக்காது. எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. இறைவனின் அருளால் தற்போது பேசிக்கொண்டிருக்கிறேன். உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறேன். என்னை நலம் விசாரித்த கமல்ஹாசன், உள்ளிட்ட பிரபலங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.