உலகப் புகழ் பெற்ற 'கேன்ஸ் திரைப்பட விழா' பிரான்ஸ் நாட்டில் உள்ள கான் நகரில் 1946 முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான கேன்ஸ் விழா கடந்த 16ஆம் தேதி தொடங்கி பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.
இந்த விழாவின் சிவப்பு கம்பள வரவேற்பில் இந்திய பிரபலங்களான நடிகைகள் ஐஸ்வர்யா ராய் பச்சன், சாரா அலி கான், அனுஷ்கா சர்மா மற்றும் மிருணால் தாக்கூர் உள்ளிட்டோர் வித்தியாசமான மாடர்ன் உடையில் கலந்து கொண்டனர். மேலும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வேஷ்டி, சட்டையிலும் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்து கொண்ட குஷ்பு பட்டு புடைவையிலும் கலந்து கொண்டார்.
மே 27 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் உலகில் பல்வேறு மொழிகளில் உள்ள ஆவணப்படங்கள், திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்தியாவில் இருந்து அனுராக் காஷ்யப் இயக்கிய 'கென்னடி' படம் மிட்நைட் ஸ்கீரினிங் (Midnight Screenings section) பிரிவில் திரையிடப்பட்டது. இதற்காக அனுராக் காஷ்யப், மற்றும் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த சன்னி லியோன் உள்ளிட்ட படக்குழுவினர் சிலர் பிரான்ஸ் சென்று கலந்து கொண்டனர். இப்படம் திரையிடப்பட்ட நிலையில் அரங்கில் இருந்த அனைவரும் படம் முடிந்தவுடன் கிட்டத்தட்ட 7 நிமிடத்துக்கு எழுந்து நின்று கைதட்டினர். இதை பார்த்த சன்னி லியோன் நெகிழ்ச்சியில் பாராட்டிய அனைவருக்கும் கண்கலங்கி நன்றி தெரிவித்தார். மேலும் அனுராக் காஷ்யப் உள்ளிட்ட படக்குழுவினரும் கண்கலங்கி விட்டனர்.