பெரும்பாலும் தமிழ் சினிமாவில் ஆண் இயக்குநர்கள் கோலோச்சும் காலகட்டத்தில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளனர் சுதா கொங்கரா. 'துரோகி ' படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர் மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச் சுற்று படத்தை இயக்கியதன் மூலம் பலரது கவனத்தையும் பெற்றார். இதனை தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று திரைப்படத்தை இயக்கிருந்தார். இப்படம் வெளியாகி பலரது பாராட்டுகளை பெற்றதோடு, சுதா கொங்கராவை முன்னணி இயக்குநர் அந்தஸ்திற்கு உயர்த்தியது.
இந்நிலையில் சுதா கொங்கராவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இந்திய முழுவதும் பெரும் வசூல் சாதனை படைத்தது வரும் 'கே.ஜி.எஃப் 2' படத்தை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கவுள்ளார். இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள அந்நிறுவனம் உண்மை கதையை மையமாக வைத்து இப்படம் உருவாக உள்ளதாக தெரிவித்துள்ளது. சுதா கொங்கராவின் முந்தைய படமான 'சூரரைப் போற்று' திரைப்படம் கேப்டன் கோபிநாத் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட நிலையில் இந்த படமும் ஒரு உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்படவுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இயக்குநர் சுதா கொங்கரா மீண்டும் சூர்யாவை வைத்து படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. ஒருவேளை அந்த படத்தைத்தான் ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. ஆனால் படம் குறித்த வேறு எந்த அறிவிப்பையும் படக்குழு வெளியிடவில்லை. விரைவில் குறித்து அறிவிப்புகள் வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தற்போது பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் சாலார் படத்தை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.