ஜோக்கர், அருவி, கைதி, என்.ஜி.கே என வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களைத் தயாரித்தவர் எஸ்.ஆர். பிரபு. ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேலும் விநியோகஸ்தராகவும் பல்வேறு படங்களை வெளியிட்டிருக்கிறார். இப்போது கார்த்தியின் 'ஜப்பான்', ராஷ்மிகா மந்தனாவின் 'ரெயின்போ', கீர்த்தி சுரேஷின் 'கண்ணி வெடி' உள்ளிட்ட படங்களைத் தயாரித்து வருகிறார்.
இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் குறித்து ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "சினிமாவில் இருக்கும் சூப்பர் ஸ்டாரின் சகாப்தம் முடிந்துவிட்டது. ஒவ்வொரு நடிகருக்கும் சொந்த மார்க்கெட் மதிப்பு உள்ளது. அந்த மதிப்பு படம் வெளிவரும் தேதி, கதை, கூட்டணி, போட்டி ஆகியவற்றின் மூலம் மாறுபடும்.
சினிமா ஒரு சந்தை. இதனைப் புரிந்துகொண்டால், அது மற்றவற்றை ஆதரிக்கும். சந்தை முழுவதையும் உயர்த்தும் மற்றும் தன்னுடைய எல்லையை விரிவுபடுத்தும். இதற்கான சமீபத்திய சிறந்த உதாரணம் தெலுங்கு சினிமா சந்தை.
அனைத்துச் சந்தைகளிலும் உள்ள நடிகர்கள், வியாபாரம் மற்றும் ரசிகர்கள் இதனைப் புரிந்து கொள்ளவேண்டும். இது ஒரு புதிய விதிமுறையாக மாறும் என்றும் ரசிகர்கள் உள்பட இந்திய சினிமா சந்தை வியாபார ரீதியாகச் சிறப்பாக முன்னேறும் என்றும் நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.