இவ்விழாவில் நடிகர் சிவக்குமார் பேசுகையில், “உங்களுக்கெல்லாம் அகரம் என்கிற அறக்கட்டளை இருக்கு, அதன் உரிமையாளர் ஒரு நடிகர் இருக்கிறார், இன்னொரு ஹீரோ அவருக்கு உதவியாக இருக்கிறார். நான் பிறந்தபோது எனக்கு யாரும் இல்லை. நான் பிறந்து ஒரு வயது இருக்கும்போது என்னுடைய தந்தை இறந்துவிட்டார். அவர் சிவப்பா, கருப்பா என்று கூட தெரியாது. எனக்கு நான்கு வயதிருக்கும்போது, எஸ் எஸ் எல் சி படித்து முடித்து கல்லூரிக்கு செல்ல வேண்டிய 16 வயது அண்ணன் பிளேக் நோயால் இறந்துபோனார். என்னுடைய கிராமங்களில் உச்சக்கட்ட பஞ்சம். கம்பு, கேழ்வரகு, சாமை போன்றவை விளையவில்லை மனிதனின் உயிரை கொல்லும் எருக்கஞ்செடி, அரளிவிதை வளர்ந்தது. அந்த மாதிரி கடுமையான சூழ்நிலையில் நான் பிறப்பதற்கு முன்பு என்னுடைய ஒரு அண்ணன், எட்டு வயதில் அக்கா இறந்துவிட்டனர், பிளேக் நோயால் ஒரு அண்ணன் இறந்துபோனார். அதன்பின் ஒரு அக்கா இருந்தார்கள். நான் கடைசி ஐந்தாவது பையனாக இருந்தேன். என்னுடைய அம்மா என்னை வளர்த்ததால் இங்கு நான் உங்கள் முன்னே நிற்கிறேன். நான் போயிருந்தால் அகரமும் இல்லை, சூர்யாவும் இல்லை, கார்த்தியும் இல்லை. அந்த தாய்க்குதான் நீங்கள் நன்றி சொல்லவேண்டும். அப்போது ஒரு சவரண் நகையின் விலை 12 ரூபாய். நான் இரண்டாவது படிக்க இரண்டு ரூபாய், எனது அக்கா மூன்றாவது படிக்க மூன்று ரூபாய். மொத்தம் ஐந்து ரூபாய். ஒரு சவரண் நகைக்கு பாதியாக இருந்தது படிப்பு செலவு அதனால் என்னுடைய அக்காவின் படிப்பை நிறுத்திவிட்டு, என்னை படிக்க வைத்தார்கள்” என்றார்.