தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இமான் தனது படங்களின் மூலம் திறமையான இசைக்கலைஞர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறார். கண் பார்வையற்றவரான குருமூர்த்தி விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடலை பாடியதைப் பார்த்த இமான், அவரின் திறமையைப் பாராட்டியதோடு, திருமூர்த்தியை சீறு மற்றும் அண்ணாத்த ஆகிய இரு படங்களில் பாட வாய்ப்பளித்தார்.
இவரைப் போன்று வைக்கம் விஜயலட்சுமி, கும்கி படத்தில் மகிழினி தமிழ்மாறன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஹரிஹரசுதான், சீமராஜா படத்தில் செந்தில் கணேஷ் உள்ளிட்ட திறமையான இசைக்கலைஞர்களைத் தனது படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் இமானின் பட்டியலில் அடுத்தாக சேர்ந்திருப்பவர் இளம் பாடகி ஸ்வஸ்திகா சாமிநாதன். இமான் இசையமைத்துவரும் வரும் பப்ளிக் படத்தில் இடம்பெற்றுள்ள 'அணையா விளக்கு..." என்ற பாடலை ஸ்வஸ்திகா சாமிநாதன் பாடுவதற்கு வாய்ப்பளித்து உள்ளார். இப்பாடலை யுகபாரதி எழுதியுள்ளார். இது குறித்த அறிவிப்பைத் தனது சமூக வலைதளப்பதிவில் தெரிவித்த இமான், அணையா விளக்கு பாடலை கேட்க ஆவலாக இருக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.