சிவகார்த்திகேயனின் 'டான்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ள எஸ்.ஜே சூர்யா தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் 'மார்க் ஆண்டனி' படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இதனிடையே 'முத்தின கத்திரிக்காய்' படத்தை இயக்கிய வெங்கட் ராகவன் இயக்கத்தில் 'கடமையை செய்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் மொட்டை ராஜேந்திரன், சார்லஸ் வினோத், வின்சென்ட் அசோகன், ராஜசிம்மன், ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலரை நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார். வேலையில்லாததால் கிடைக்கிற வேலையை செய்யும் இளைஞர் ஸ்ட்டூபர் (மூளையில் ஏற்படும் பாதிப்பு) நோயால் பாதிக்கப்படும் போது ஏற்படும் நிகழ்வுகளை நகைச்சுவையாக கூறியுள்ள இப்படத்தின் ட்ரைலர் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் அதில் ஏற்கனவே வெளியான ’நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் எஸ்.ஜே சூர்யா கூறிய "டேய் சும்மா இர்ரா" என்ற வசனம் 'கடமையை செய்' படத்திலும் இடம்பெற்றுள்ளது ரசிகர்களை ரசிக்கும்படி வைத்துள்ளது.