திரைத்துறையில் குஜராத்தி மொழி படத்தின் மூலம் அறிமுகமான சித்தி இட்னானி தெலுங்கு படங்களில் அதிகம் நடித்து வந்தார். தமிழ் சினிமாவில் சிம்பு நடிப்பில் வெளியான 'வெந்து தணிந்தது காடு’ படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களிடம் பிரபலமானார். அண்மையில் ஆர்யா நடிப்பில் வெளியான 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படத்தில் நடித்திருந்தார். மேலும் இந்தியில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பிய 'தி கேரளா ஸ்டோரி' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ஒருவராக நடித்திருந்தார்.
இந்நிலையில் நடிகை சித்தி இட்னானி நடிப்பதைத் தாண்டி அவ்வப்போது ஆதரவற்றோர்களை சந்தித்து உதவி வழங்கி வருகிறார். கடந்த ஆண்டு சென்னையில் உள்ள ஒரு முதியோர் இல்லத்திற்குச் சென்று உணவு வழங்கினார். அந்த வகையில் தற்போது மும்பையில் உள்ள ஒரு மாற்றுத்திறனாளி குழந்தைகள் பள்ளிக்குச் சென்று பரிசுகளை வழங்கியுள்ளார். மேலும் அவர்களுடன் பேசி மகிழ்ந்து தனது சகோதரரின் பிறந்தநாளை அவர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அது தற்போது பலரது கவனத்தைப் பெற்று பாராட்டுக்களை அள்ளி வருகிறது.