இளம்பாடகர்கள் ‘தெருக்குரல்’ அறிவு மற்றும் தீ குரலில் சந்தோஷ் நாராயணன் இசையில் கடந்த மார்ச் மாதம் வெளியான பாடல் ‘என்ஜாய் எஞ்சாமி’. சுயாதீனக் கலைஞர்களை ஊக்குவிக்க ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கியுள்ள மாஜா தளத்தில் வெளியான இப்பாடல் இன்ஸ்டண்ட் ஹிட் அடித்தது. இதுவரை யூ-ட்யூபில் 31 கோடி பார்வையாளர்களை இப்பாடல் கடந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாஜா தளத்தில் ஷான் வின்சென்ட் டி பால், நவ்ஸ் -47, சந்தோஷ் நாராயணன் குரலில் 'நீயே ஒளி' என்ற பாடல் வெளியானது. இதுவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
சுயாதீன இசைக்கலைஞர்களுக்கான இதழான 'ரோலிங் ஸ்டோன்ஸ்'-ன் ஆகஸ்டு மாத இந்திய இதழில் தீ மற்றும் ஷான் வின்சென்ட் டி பால் குறித்து ஒரு கட்டுரை வெளியானது. அந்த இதழின் அட்டைப்படத்தில் பாடகி தீ மற்றும் ஷான் வின்சென்ட் டி பால் ஆகியோர் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது. அதைத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்த 'ரோலிங் ஸ்டோன்ஸ்'இன் இந்தியப் பதிப்பு, என்ஜாய் எஞ்சாமி மற்றும் நீயே ஒளி பாடல் மூலம் இந்த இரு கலைஞர்களும் எல்லைகளைக் கடந்து புகழ் பெற்றார்கள் எனக் குறிப்பிட்டிருந்தது. இப்பதிவைக் கண்ட ரசிகர்கள், இந்த இரண்டு பாடல்களையும் எழுதியவரான ‘தெருக்குரல்’ அறிவின் புகைப்படம் ஏன் இதில் இடம்பெறவில்லை எனக் கேள்வியெழுப்பினார். இதுகுறித்து இயக்குநர் பா.ரஞ்சித் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கேள்வியெழுப்பியதையடுத்து, இந்த விவகாரம் பூதாகரமானது. இந்த விவகாரம் குறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் விவாதித்துவந்த நிலையில், ஷான் வின்சென்ட் டி இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள நீண்ட அறிக்கையில், 'ரோலிங் ஸ்டோன்ஸ்' இதழில் வெளியான கவர்ஸ்டோரி அடுத்து வெளியாகவுள்ள 'மேட் இன் ஜாஃப்னா' என்ற தன்னுடைய இசை ஆல்பம் மற்றும் பாடகி தீயின் மற்றொரு ஆங்கில இசை ஆல்பம் தொடர்பானது என்றும், 'ரோலிங் ஸ்டோன்ஸ்' வெளியிட்ட ட்விட்டர் பதிவினால்தான் இந்த குழப்பங்கள் ஏற்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். இசைத்துறையில் சாதிப்பது என்பது எவ்வளவு கஷ்டமானது என்று தனக்குத் தெரியும் எனக் கூறியுள்ள ஷான் வின்சென்ட் டி, பாடகர் அறிவுக்கு தான் எப்போதும் ஆதரவளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த அறிக்கையில் இயக்குநர் பா.ரஞ்சித் மீது அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.