அனுபவ் சின்ஹாவின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் 'ஆர்டிக்கள் 15'. இந்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இந்தியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தமிழில் 'நெஞ்சுக்கு நீதி' என்ற பெயரில் அருண்ராஜா காமராஜ் இயக்க உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்திருந்தார். கடந்த வெள்ளிக்கிழமை (20.5.2022) வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவதோடு, திமுகவினரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இப்படம் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற, மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தம்பி உதயநிதி நடித்த படத்தை முதல் காட்சி பார்த்துவிட்டுப் படம் எடுத்துப் பகிர்ந்து படத்தைப் பாராட்டி பதிவிடுகிறார்கள். டிக்கெட்டுகளை வாங்கி இலவசமாகக் கொடுக்கிறார்கள். படம் பார்ப்பவர்களுக்கு பிரியாணி போடுகிறார்கள். சிறப்பான மக்கள் பணி! வாழ்க திராவிட மாடல்" எனக் குறிப்பிட்டுள்ளார்.