சிம்பு - கௌதம் மேனன் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவான 'வெந்து தணிந்தது காடு' படம் சமீபத்தில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெற்றியானதை தொடர்ந்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கௌதம் மேனனுக்கு பைக்கும், சிம்புவுக்கு காரும், நடிகர் கூல் சுரேஷிற்கு ஐ ஃபோனும் பரிசளித்தார். மேலும் படத்தை பார்த்த திரைபிரபலனங்கள் பலரும் படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.அதே போன்று படத்தின் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது. குறிப்பாக ‘மல்லிப் பூ’ பாடல் பலரது விருப்பப் பாடலாக மாறியுள்ளது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 'வெந்து தணிந்தது காடு' படத்தில் இடம்பெற்றுள்ள 'மல்லிப் பூ' பாடல் குறித்து பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "அன்புத்தம்பி சிலம்பரசன் நடிப்பில், ஆருயிர் இளவல் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் வெளிவந்திருக்கிற 'வெந்து தணிந்தது காடு' படத்தில் பாசத்திற்குரிய அக்கா தாமரை எழுதி பாடகி மதுஸ்ரீ பாடிய 'மல்லிப் பூ' அண்மை நாட்களாக எண்ணற்ற முறை என் பயணங்களிலும், என் ஓய்வு நேரங்களிலும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.
கணவனைப் பிரிந்து இருக்கக்கூடிய பெண்ணின் ஏக்கத்தையும், வலியையும் தன் மென் அழகு தமிழால் அப்படியே வடித்திருக்கின்ற அக்கா தாமரை அவர்களுக்கும், அவ்வரிகளுக்கு ஆகச்சிறந்த இசையால் உயிரூட்டியிருக்கிற ஏ.ஆர் ரஹ்மானுக்கு எனது பாராட்டுகளும், வாழ்த்துகளும். உங்கள் பணி தொடரட்டும் தொடரட்டும்" என குறிப்பிட்டுள்ளார்.