இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் 'பொன்னியின் செல்வன்'. எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் எடுக்கப்படுகிறது. இரு பாகங்களாக உருவாகும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. முழுவீச்சில் நடைபெற்றுவந்த இப்படத்தின் படப்பிடிப்பு, கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
தற்போது கரோனா பரவலின் தாக்கம் குறையத் தொடங்கியதையடுத்து, மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ள படக்குழு, புதுச்சேரியில் இறுதிகட்டப் படப்பிடிப்பை நடத்திவருகிறது. இதில், ஐஸ்வர்யா ராய், சரத்குமார் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுவருகின்றன. இந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் நடிகை ஐஸ்வர்யா ராயின் குடும்பமும் நடிகர் சரத்குமாரின் குடும்பமும் சந்தித்துக்கொண்டனர். அந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகின்றன.