இவரது மறைவு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி வந்தனர். இதையடுத்து அவரது உடல் தேமுதிக அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாளை மாலை 4.45 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் இயக்குநர் எஸ்.ஏ சந்திரசேகர், “என் இனிய நண்பர் விஜயகாந்த்தை உயிரோடு இருக்கும் போதே ஆறத்தழுவி முத்தமிட வேண்டும் என கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆசைப்பட்டேன். அதற்காக முயற்சியும் செய்தேன். அதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது ஒரு உயிரற்ற உடலை பார்க்ககூடாது என கடவுள் நினைத்தாரோ இல்லையோ, தெரியவில்லை. இந்த நாளில் தான் துபாயில் இருக்கிறேன். திரையுலகிலும் அரசியலுலகிலும் ஒரு சகாப்தம் இன்று முடிந்திருக்கிறது. அதற்காக கண்ணீர் சிந்துவதை விட வேறொன்றும் தெரியவில்லை” என்றார்.