Skip to main content

“ஜெயலலிதாவை எரிச்சல்படுத்திய கேப்டனின் வார்த்தைகள்..”  -திமுக சதியென பிரேமலதா குற்றச்சாட்டு!

Published on 25/03/2019 | Edited on 26/03/2019

“பிரேமலதா பிரமாதமாகப் பேசிவிட்டார்.” என்று சிலிர்க்கிறார்கள் விருதுநகர் தொகுதி தேமுதிகவினர். 2019 தேசிய ஜனநாயக கூட்டணியின் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசிய பேச்சுதான் கூட்டணிக் கட்சியினரை  உற்சாகம் கொள்ள வைத்திருக்கிறது.  
 

சாத்தூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜவர்மனை  ‘சட்ட மன்ற உறுப்பினர்’ என்று விளித்த பிரேமலதா, விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகர்சாமியை ஏனோ,  ‘வேட்பாளர்’ என்றே குறிப்பிட்டார். அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை, ‘கவலையை விரட்டுபவர்’ என,  உளவியல் நிபுணர் ரேஞ்சுக்கு உயர்த்திப் பேசியபோது, அமைச்சரே நெளிந்தார். 

 

premalatha vijayakanth


‘அதிமுக கூட்டணி இயற்கையானது’ என்று கூறிவிட்டு, அவர் அளித்த விளக்கம் கேப்டன் விசுவாசிகளைக் கை தட்ட வைத்தது. 
 

தன் வீட்டுப் படுக்கையறையில் எம்.ஜி.ஆர். ஜானகியம்மாள் போட்டோ இருப்பதையும், தங்களின் பிள்ளைகள் விஜயபிரபாகரன், சண்முகப்பாண்டியனை ஜானகியம்மாள், தன் மடியில் உட்காரவைத்துக் கொஞ்சியதையும் பெருமிதத்துடன் குறிப்பிட்ட பிரேமலதா, “என்ன நடந்ததுன்னு பல பேருக்குப் புரியாது. ஒரு விஷயத்தைச் சொல்லுகிறேன்..” என்று அதிமுகவும் தேமுதிகவும் பிரிந்ததற்கான காரணத்தைக் கூறினார். 
 

“அன்னைக்கு சட்ட சபையில் நடந்த மிகப்பெரிய பிரச்சனைக்கு பின்னால இருந்தது திமுகவுடைய சூழ்ச்சிதான். எதைச்சொன்னால், கேப்டனை உணர்ச்சிவசப்படுத்தலாம். எப்படி நடந்துகொண்டால் ஜெயலலிதாவைக் கோபப்படுத்தலாம். அப்படிங்கிறத தெரிஞ்சிக்கிட்டு, ஜெயலலிதாவை எரிச்சல்படுத்துற மாதிரி சில வார்த்தைகளைப் பேச வைத்தனர். அதிமுக – தேமுதிக கூட்டணியைப் பிளவுபடுத்த வேண்டுமென்று துரோகிகளை வைத்து சட்டமன்றத்திலேயே சதி செய்து, கூட்டணியை முறிக்கச் செய்தனர்.” என்று விஜயகாந்த் சட்டமன்றத்தில் ஜெயலலிதாவைப் பார்த்து நாக்கைத் துருத்தியதன் பின்னணியை விவரித்தார். 
 

‘எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர் கேப்டன்’ என்று தன்னுடைய கணவரின் பலவீனத்தை வெளிப்படையாக ஒத்துக்கொண்டாலும், புகழ்பாடவும் தவறவில்லை. 

 

premalatha vijayakanth


“எம்.ஜி.ஆர். இருந்தவரையிலும் கலைஞரால் 15 வருட காலம் ஆட்சிக்கு வர முடியவில்லை. அதுபோல, புரட்சிக்கலைஞர் கட்சி ஆரம்பித்த பிறகு, இன்று வரையிலும் சட்ட மன்ற தேர்தலிலும் பாராளுமன்ற தேர்தலிலும் திமுக வெற்றி பெறவே இல்லை.” என்று ஒரே போடாகப் போட்டார். 
 

2005-ல்தான் தேமுதிக என்ற கட்சி தொடங்கப்பட்டது. 2006 சட்ட மன்ற தேர்தலில் திமுக தலைமையிலான  ஜனநாயக முற்போக்கு கூட்டணி  163 இடங்களைக் கைப்பற்றி,  தமிழக முதல்வரானார் கலைஞர். அந்தத் தேர்தலில் அதிமுக தலைமையிலான ஜனநாயக மக்கள் கூட்டணி  69 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்று, எதிர்க்கட்சித் தலைவரானார் ஜெயலலிதா. 2011 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 31 இடங்களில் வென்றது. 2016 தேர்தலில்  திமுக கூட்டணி 98 இடங்களைக் கைப்பற்றியது. எதிர்க்கட்சித் தலைவரானார் மு.க.ஸ்டாலின். 2009 பாராளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தமிழகத்தில் 27 இடங்களைக் கைப்பற்றி முதலிடம் பெற்றது. 2014 பாராளுமன்ற தேர்தலில் மட்டுமே ஒரு இடத்தில்கூட திமுக வெற்றி பெறவில்லை. இந்த வரலாறெல்லாம் அறிந்தோ, அறியாமலோ, கேப்டன் கட்சி ஆரம்பித்தபிறகு சட்டமன்ற தேர்தலிலும், பாராளுமன்ற தேர்தலிலும் திமுக வெற்றிபெறவே இல்லை என்று பேசி, கூட்டணிக் கட்சியினருக்கு உற்சாகமூட்டினார். 
 

அந்தக் கூட்டத்தில் பெருமிதத்துடன் பிரேமலதா முன்வைத்த இன்னொரு விஷயம் இது –
 

“எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் இருவிரல் காட்டுவார்கள். இதில் என்ன இருக்கிறது?  வி என்ற கேப்டனோட பெயர் அடங்கியிருக்கிறது. வெற்றி என்பதும் அடங்கியிருக்கிறது. விருதுநகர் ஊர் பெயரிலும் முதல் எழுத்து வி. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி ஜெயலலிதா, புரட்சிக்கலைஞர் கேப்டன்.. இந்த மூவரும் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்து மிகப்பெரிய தலைவர்கள் ஆனவர்கள்.  எனக்கு இந்த மூன்றுபேரும் ஒரேமாதிரிதான் தெரிவார்கள். 
 

கடந்த தேர்தலில் லேடியா? மோடியா? என்று மோடிக்கே சவால் விட்டவர் ஜெயலலிதா. அவரைப்போலவே,  கேப்டனும் யாருக்கும் பயப்பட மாட்டார். தன் மனதில் உள்ளதை தைரியமாகப் பதிய வைப்பவர். மிகவும் தைரியமானவர். தைரியம் இருந்தால்தான் வாழ்க்கையில் பெற்றிபெற முடியும் என்பதற்கு இலக்கணமாக இருவரும் இருக்கிறார்கள். ஜெயலலிதாவும் கேப்டனும் சினிமாவில் மட்டுமே நடிக்கத் தெரிந்தவர்கள். மக்கள் முன் நடிக்கத் தெரியாதவர்கள்.” என்றார். 
 

எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவுக்கு இணையாகக் கேப்டனையும் பிரேமலதா பாராட்டிப் பேசியபோது,   அக்கூட்டத்தில் பெருமளவில் கலந்துகொண்ட அதிமுகவினரும்  ஆர்ப்பரித்தனர். 


“திராணி இருக்கிறதா?” என்று ஜெயலலிதா கேள்வி கேட்டதும், ‘திராணி இருக்கிறது’ என்று பதிலடி தந்ததோடு, ‘திராணியார்’ என்று பட்டம் சூட்டி, தேமுதிகவினர் கேப்டனை  குஷிப்படுத்தியதும்கூட,  திமுகவின் சதியாகத்தான் இருக்குமோ?    


 

Next Story

விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்குவதில் தாமதம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
padma bhushan award will be presented to Vijayakanth in the next phase of the ceremony.

மத்திய அரசால், இந்திய குடிமகனுக்கான உயரிய விருதுகளாக பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் என மூன்று அடுக்குகளாக இந்த விருதுகள் இருக்கிறது. இந்த விருதுகளுக்காக மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, சமூக பணி, என பல்வேறு தளங்களில் சிறப்பாக பணியாற்றியவர்களை பரிந்துரை செய்யப்பட்டு பின்னர், விருது வழங்கும் குழுவால் தேர்வு செய்யப்படுகிறார்கள். 

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரியில் அறிவித்தது. இதில் மறைந்த நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

padma bhushan award will be presented to Vijayakanth in the next phase of the ceremony.

பத்ம விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (22.04.2024) நடைபெற்ற விழாவில் 3 பத்ம விபூஷன், 8 பத்ம பூஷன் மற்றும் 55 பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்பட்டன. அனைவருக்கும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார். இதில் பிரபல பாடகி உஷா உதூப் மற்றும் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கும் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.

நேற்றைய விழாவில் மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படுவதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு விருது வழங்கப்படவில்லை. அதனால் அடுத்தடுத்த கட்ட விழாக்களில் விஜயகாந்துக்கு விருது வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

தேமுதிக ஒன்றிய செயலாளரை தாக்கிய அதிமுக ஒன்றிய செயலாளர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
AIADMK union secretary attacked DMK union secretary in Karur!

கரூர் மாவட்டத்தில் தேமுதிக  ஒன்றிய செயலாளரை கூட்டணியில் உள்ள அதிமுக ஒன்றிய செயலாளர் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் கடவூர் தேமுதிக தெற்கு ஒன்றிய  செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான ஆல்வின் என்பவர் பாலவிடுதி காவல் நிலையம் அருகே தன் கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டு இருக்கையில் அவ்வழியே வந்த அதிமுகவைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் வேண்டுமென்றே ஆல்வின் இடம் வாய் தகராறு செய்துள்ளார்.

இதற்கு ஆல்வின் சாதாரணமாக பதில் அளித்ததையடுத்து ஏற்கனவே தேர்தல் பணப்பட்டுவடாவில் ஏற்பட்ட பகையில் அதிமுக கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான ரமேஷ் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து காவல் நிலையம் முன்பே கொலை செய்யும் நோக்கோடு ரமேஷ் ஆல்வினை தாக்கி உள்ளார். இதனால் படுகாயம் அடைந்த ரமேஷ் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட ஆல்வின் கூறுகையில், கொலைவெறி தாக்குதல் நடத்திய அதிமுக கவுன்சிலர் ரமேஷை மாவட்ட காவல்துறை கைது செய்திட வேண்டும். அவரை குண்டர் சட்டத்தில் அடைத்திட வேண்டும். அதிமுக, தேமுதிக கூட்டணியில் இருந்தும் அதிமுகவினர்  தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் தான் பெரும் அளவில் மன உளைச்சல் அடைந்ததாகவும் இதற்கு அதிமுக தலைமை பதில் சொல்லியே ஆக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்ததும் கூட்டணி முடிந்தது போல அதிமுகவினர் தங்கள் வேலையை காட்ட துவங்க உள்ளனர் என பாதிக்கப்பட்டவருடன் வந்த தேமுதிக நிர்வாகிகள் வேதனையுடன் புலம்பினர்.