இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். மிலிந்த் ராவ் இயக்கத்தில், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள 'நெற்றிக்கண்' படத்தை இந்நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும், அறிமுக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள 'ராக்கி' என்ற திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையையும் இந்நிறுவனம் கைப்பற்றியுள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் தயாராகி வரும் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தை சவன் ஸ்கிரீன் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வருகிறது. தயாரிப்பு, விநியோகம் என முழுநேர தயாரிப்பு பணிகளில் கவனம் செலுத்த முனைப்பு காட்டி வரும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம், தற்போது 'கூழாங்கல்' என்ற புதிய படத்தின் மொத்த உரிமையைக் கைப்பற்றியுள்ளது.
பி.எஸ் வினோத்ராஜ் என்ற அறிமுக இயக்குனர் இயக்கிய இப்படத்திற்கு, யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இது குறித்து ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மிக அரிதான ஒரு நாள்தான். ஒரு படைப்பைப் பார்த்து வியந்து, நாம் இருக்கும் துறையை நினைத்துப் பெருமைகொள்ளும் எண்ணம் தோன்றும். அப்படி ஒரு நாளாக, இறுதிக்கட்டப் பணிகளில் இருந்த 'கூழாங்கல்' எனும் திரைப்படத்தைப் பார்த்தபோது தோன்றியது. 'கூழாங்கல்' பி.எஸ்.வினோத்ராஜின் முதல் படம். தலைப்பைப் போலவே படம் மிக எளிமையாக இருந்தாலும், அது எங்களுக்குள் ஏற்படுத்திய தாக்கம் ஆழமானது. முழுக்க முழுக்க திறமையான புதுக் குழுவினராலும் நடிகர்களாலும் இயக்குநராலும் உருவான இத்திரைப்படத்தைப் பார்த்து பாராட்டுகளோடு மட்டும் நிற்காமல், தன்னுடைய பின்னணி இசையால் கூழாங்கல்லின் ஆன்மாவை மீட்டெடுத்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. இப்படத்தின் மூலமாக எங்களுக்குக் கிடைத்த திரை அனுபவத்தை நம் மக்கள் அனைவருக்கும் வழங்குவது மட்டுமல்லாது, சர்வதேச திரைப்பட விழாக்களிலும் கொண்டு செல்வது என முடிவு செய்து இப்படத்தின் முழு தயாரிப்பைப் பொறுப்பேற்றுள்ளோம். உங்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் இத்திரைப்படத்தை உங்களுக்காக வழங்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.