இந்தியா தலைமையேற்று நடத்தும் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 அடுத்த மாதம் அக்டோபர் 5 தொடங்கி நவம்பர் 19 வரை நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில், இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், தென் ஆப்ரிக்கா, வங்கதேசம், நெதர்லாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட அணிகள் பங்கேற்கின்றன.
இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் பங்கேற்கிறது. இந்தியாவின் முதல் போட்டி, சென்னை, எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலியாவுடன் நடக்கிறது. இந்த போட்டி அக்டோபர் 8 ஆம் தேதி நடக்கவுள்ளது. இப்போட்டியைக் காண இந்திய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், உலகக் கோப்பை 2023க்கான போட்டிகளை காண பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பிசிசிஐ சார்பில் கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் அமிதாப் பச்சன், சச்சின் டெண்டுல்கர், உள்ளிட்ட பிரபலங்களை தொடர்ந்து ரஜினிக்கும் வழங்கப்பட்டது. பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, ரஜினியை நேரில் சந்தித்து கோல்டன் டிக்கெட்டை வழங்கினார்.
இந்நிலையில் ஜெய்ஷாவுக்கு நன்றி தெரித்துள்ளார் ரஜினிகாந்த். இது தொடர்பாக அவர் வெளியுள்ள எக்ஸ் பதிவில், "பிசிசிஐ-யிடமிருந்து சிறப்புமிக்க கோல்டன் டிக்கெட்டைப் பெற்றதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அன்புள்ள ஜெய்ஷாஜி... உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் எண்ணங்களுக்கும் மிக்க நன்றி" என குறிப்பிட்டுள்ளார்.