ரக்ஷித் ஷெட்டி நடிப்பில் கிரண் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள '777 சார்லி' படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. கன்னடத்தில் உருவாக்கப்பட்டு தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியான இப்படத்தில் சங்கீதா சிருங்கேரி, ராஜ் பி. ஷெட்டி, டேனிஷ் சைட் மற்றும் பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். உறவுகள் இல்லாத ஒரு இளைஞனுக்கும், ஒரு நாயிக்கும் இடையே இருக்கும் உறவைப் பறைசாற்றும் வகையில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் கூட கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை படத்தை பார்த்துவிட்டு கண் கலங்கி படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் கூறினார்.
அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் '777 சார்லி' படத்தை பார்த்து படக்குழுவினரை தொலைபேசியில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். இதனை ரக்ஷித் ஷெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், "என்ன ஒரு அற்புதமான ஆரம்பம் இன்றைய நாள். ரஜினிகாந்த் சாரிடம் அழைப்பு வந்தது. அவர் நேற்று இரவு '777 சார்லி' படத்தை பார்த்து ரசித்துள்ளார். அவர், படத்தின் மேக்கிங் பற்றியும், படத்தின் ஆழ்ந்த டிசைன்கள் பற்றியும் உயர்வாகப் பேசினார். குறிப்பாக கிளைமாக்ஸ் மற்றும் அது ஆன்மீகக் குறிப்பில் முடிவடைகிறதுதை பாராட்டினார். சூப்பர் ஸ்டாரிடம் இருந்து இதுபோன்ற வார்த்தைகளைக் கேட்பது அற்புதமாகவுள்ளது" என குறிப்பிட்டு ரஜினிக்கு நன்றி தெரிவித்துள்ளார் ரக்ஷித் ஷெட்டி.