மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படம் இன்று பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே பார்த்திபன் இப்படத்தை தஞ்சாவூரில் உள்ள ஒரு திரையரங்கிற்கு சென்று ரசிகர்களுடன் ரசித்து பார்த்துள்ளார்.
இந்நிலையில் பார்த்திபனை மணிரத்னம் தொலைபேசியின் வாயிலாக பாராட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், மணிரத்னம், "உங்கள் சொந்த படப்பிடிப்பின் போது, நேரம் ஒதுக்கி இப்படப்பிடிப்பிற்கு வந்ததற்கும் படத்திற்காக பல முயற்சிகளை மேற்கொண்டதற்கும் நன்றி. மேலும் இன்று தஞ்சை சென்றதற்கும் நன்றி" என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவிற்கு பார்த்திபன், "2 வரிகள் பேசவே 98 சதவீதம் ஜி.எஸ்.டி வரி போடும் மனிதரிடமிருந்து 5.2 வரிகள் பாராட்டு- பாரே சீழ்க்கை அடிப்பது போலுள்ளது" என பதிலளித்துள்ளார். பார்த்திபனின் இந்த பதிவு தற்போது ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது.