மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த செப்டம்பரில் வெளியான படம் பொன்னியின் செல்வன். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, வசூல்ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதுவரை உலக அளவில் 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இதனைத் தொடர்ந்து 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. சமூக வலைத்தளங்களில் அண்மையில் இப்படம் சொன்ன தேதியில் ரிலீஸாகாமல் தீபாவளிக்கு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகப் பரவலாகப் பேசப்பட்டது. இதனால் பொன்னியின் செல்வன் ரசிகர்கள் சற்று குழப்பத்தில் இருந்தனர்.
இந்த நிலையில், ரசிகர்களின் குழப்பத்தைத் தீர்க்கும் வகையில் படக்குழு தற்போது ரிலீஸ் தேதியைக் குறிப்பிட்டு ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளனர். அதன்படி முன்பு அறிவித்த அதே தேதியில் ஏப்ரல் 28 ஆம் தேதி சொன்னபடி வெளியாகும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும், அந்த வீடியோவில் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் போது விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம் உள்ளிட்டோர் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
விக்ரம், "அந்த அழகான காதலுக்குள் இருக்கும் விஷயங்கள், அந்த காதலே வில்லனா இருக்கணும்..." என்றார். ஜெயம் ரவி, "அருள்மொழி வர்மர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதைத் தெரியாமல் தவிக்கிற அப்பாவும் குடும்பமும் இருக்கு..." என்றார். அந்த வீடியோ தற்போது பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.