ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், தனது சமூக வலைதள பக்கத்தில் அண்மைக்காலமாக அரசியல் ரீதியான கருத்துகளை வெளிப்படையாகப் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது மின்வெட்டு பிரச்சனை குறித்து பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில், "சாந்தோம் மற்றும் ஆழ்வார்பேட்டை பகுதியில் அடிக்கடி மின்வெட்டு நடக்கிறது. என்ன நடக்கிறது?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை டேக் செய்திருந்தார்.
இதையடுத்து மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பி.சி.ஸ்ரீராம் புகாருக்கு பதிலளித்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள பதிவில், "இப்பிரச்சனையை உடனடியாக சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினேன். சென்னை முழுவதும் உள்கட்டமைப்பை மேம்படுத்த பணிகள் நடைபெற்று வருகிறது. அதனால் மின் விநியோகத்தில் சிறிய இடையூறு ஏற்பட்டுள்ளது. அதற்காக வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.