சாய் பல்லவி, மலையாளத்தில் வெளியான 'ப்ரேமம்' படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். இதில் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அந்த வகையில் ராணா டகுபதி, சாய்பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள 'விரத பர்வம்' படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தின் ரிலீஸுக்கு முன்பு சாய் பல்லவி ஒரு பேட்டியில் பேசிய கருத்து சர்ச்சைக்குள்ளானது. சாய்பல்லவியின் கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வந்தாலும் சில பேர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. இப்படத்திற்கு ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், இயக்குநர் பா.ரஞ்சித் 'விரத பர்வம்' படத்தை பார்த்து தன் கருத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "சமீபத்தில் நான் பார்த்த சிறந்த தெலுங்கு படம் 'விரத பர்வம்'. இயக்குநர் வேணு உடுகுலா, எந்த சமரசமும் இல்லாமல் இந்தப் படத்தை உருவாக்கியதற்காகப் பாராட்டப்பட வேண்டியவர். இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்த ராணா டகுபதி-க்கு சிறப்பு பாராட்டுகள். சாய்பல்லவி சிறப்பாக நடித்துள்ளார்" என பா.ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.