ADVERTISEMENT

''பிரச்சனை வந்தவுடன் பாதுகாக்கத் தவறிய அந்த நிறுவனத்தாரின் செயல் ஏற்புடையது அல்ல'' - பா. ரஞ்சித் கண்டனம்!

10:21 AM Jun 05, 2020 | santhosh

ADVERTISEMENT


'காட்மேன்' என்ற தலைப்பில் உருவாக்கப்பட்ட இணையத் தொடர், தற்போது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இந்த இணையத் தொடரை பாபு யோகேஸ்வரன் இயக்க, இளங்கோ தயாரித்துள்ளார். வருகின்ற 12ஆம் தேதி ஜீ நிறுவனத்தின் ஓ.டி.டி. பிளாட்ஃபார்மில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. இந்தத் தொடரில் டேனியல் பாலாஜி உள்ளிட்ட சில பிரபலங்களும் நடித்திருக்கின்றனர். அண்மையில் இத்தொடரின் ட்ரைலர் வெளியானது. அதில் குறிப்பிட்ட சமூகத்தையும், மதத்தையும் இழிவுபடுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து இந்தத் தொடரைத் தடை செய்ய வேண்டும், இயக்குனர், தயாரிப்பாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து அமைப்பினர் புகாரளித்தனர்.

ADVERTISEMENT


இதுகுறித்து விசாரணை நடத்த சென்னை, மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்படி, போலீசார் ‘காட்மேன்’ தொடரின் இயக்குனர் பாபு யோகேஸ்வரன், தயாரிப்பாளர் இளங்கோ மீது கலவரத்தை ஏற்படுத்துதல், பகையை ஊக்குவித்தல், வதந்தியைப் பரப்புதல் உட்பட 7 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்கள் நேரில் ஆஜராக சம்மனும் அனுப்பி உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இதனிடையே இந்தத் தொடரை வெளியிடப்போவதில்லை என்று சமீபத்தில் ஜீ நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில் இந்தப் பிரச்சனை தொடர்பாக இயக்குனர் பா ரஞ்சித் கண்டனம் தெரிவித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்....

''காட்மேன்' தொடரின் முன்னோட்டத்தை ஒட்டி, அந்தத் தொடரின் தயாரிப்பாளர், இயக்குனர் & நடிகர் மீது அவதூறுகள் பரப்பியும், அச்சுறுத்தியும், பொய்வழக்குகள் தொடுக்கும் சமூக விரோத சனாதன கும்பல்களுக்கும், துணை நிற்கும் தமிழக காவல் துறைக்கும் வண்மையான கண்டனங்கள். இந்தத் தொடரை தயாரிப்பதில் உறுதுணையாக இருத்துவிட்டு, பிரச்சனை வந்தவுடன், காட்மேன் தொடரின் குழுவினரைப் பாதுகாக்க தவறிய ஜீ நிறுவனத்தாரின் இச்செயல் ஏற்புடையது அல்ல. மேலும் இத்தொடரை வெளியிட உரிய நடவடிக்கை மேற்கொள்க'' எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT