தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் பிசியாக நடித்து வரும் நயன்தாரா, தமிழில் ஜெயம் ரவி - அஹ்மத் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் நடித்துள்ளார். இந்தியில் ஷாருக்கான் - அட்லீ கூட்டணியில் உருவாகும் 'ஜவான்' படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் பாலிவுட்டில் கால் பதிக்கிறார். இதனைத் தொடர்ந்து நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஒரு படத்திலும், துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்கவுள்ளார்.
இதனிடையே, தனது காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவனை கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த 4வது மாதத்தில் இரட்டை ஆண் குழந்தை பிறந்திருப்பதாக விக்னேஷ் சிவன் தெரிவித்திருந்தார். இருவரும் சட்ட விதிமுறைகளை மீறி வாடகைத் தாயின் மூலம் குழந்தை பெற்றுள்ளதாகத் தொடர்ந்து விமர்சனம் எழுந்தது. இது பெரும் சர்ச்சையாக மாற, அரசு சார்பில் ஒரு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்கப்பட்டது. பின்பு அந்த விசாரணை அறிக்கையில், சட்டத்திற்கு உட்பட்டுத்தான் இருவரும் செயல்பட்டுள்ளனர் எனத் தெரியவந்தது.
இதையடுத்து, தனது இரட்டைக் குழந்தைகள் மற்றும் கணவருடன் வாழ்ந்து வருகிறார் நயன்தாரா. விக்னேஷ் சிவன் அவ்வப்போது தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் தனது இரண்டு ஆண் குழந்தைகளின் பெயரை விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். ஒரு குழந்தையின் பெயர் 'உயிர் ருத்ரோநீல் என் சிவன்' என்றும் மற்றொரு பிள்ளையின் பெயர் 'உலக் தெய்விக் என் சிவன்' என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை முன்னிட்டு திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.