இந்தி சினிமாவில் காமெடி, வில்லன், ஹீரோ மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நவாசுதீன் சித்திக். தமிழில் ரஜினியின் 'பேட்ட' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து இந்தியில் பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் திடீரென, "பார்வையாளர்களை அதிகரிக்க தவறான செய்திகளைப் பரப்புவதை நிறுத்துங்கள். இது மலிவான டிஆர்பி (TRP). எந்தப் படமும் தடை செய்யப்படுவதை நான் ஒருபோதும் விரும்பவில்லை. அதை நான் ஒருபோதும் சொல்லவும் இல்லை. திரைப்படங்களை தடை செய்வதை நிறுத்துங்கள். பொய்யான செய்திகளை பரப்புவதை நிறுத்துங்கள்" என பதிவிட்டுள்ளார்.
நவாசுதீன் சித்திக், எந்த படத்தின் பெயரையும் குறிப்பிடவில்லை. ஆனால் சமீபத்தில் 'தி கேரளா ஸ்டோரி' படம் வெளியான நிலையில் அதை தடை செய்ய வேண்டும் என பல தரப்பிலிருந்தும் போராட்டங்கள் நடைபெற்றன. இது குறித்து இப்படத்தை தடை விதிப்பதற்கு நவாசுதீன் சித்திக் ஆதரவு தெரிவித்ததாக செய்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.