95வது ஆஸ்கர் விழா அண்மையில் நடைபெற்று முடிந்தது. அதில் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடல் பிரிவில் விருது வென்றது. ஆஸ்கர் விருதினை இசையமைப்பாளர் கீரவாணியும் பாடலை எழுதிய சந்திரபோஸ் ஆகியோர் பகிர்ந்து கொண்டனர். மேலும் ஆஸ்கர் மேடையில் பாடகர்கள் கால பைரவா மற்றும் ராகுல் சிபிலிகஞ்ச் பாடினர். அதற்கு அங்கிருந்தவர்கள் எழுந்து நின்று பாராட்டினார்கள்.
இது தொடர்பாக பாடகர் கால பைரவா தனது ட்விட்டர் பக்கத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து ஒரு பதிவை பகிர்ந்திருந்தார். அதில் , "உங்கள் அனைவருடனும் ஒன்றைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஆர்.ஆர்.ஆர் படக்குழுவை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும் ஆஸ்கர் மேடையில் பாட வாய்ப்பளித்ததற்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக உணர்கிறேன். இதற்கு முழு காரணமாக இருந்த ராஜமௌலி, நடன இயக்குநர் பிரேம், கார்த்திகேயா, அம்மா" என சில நபர்களை குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவின் கீழ் ரசிகர்கள், நீங்கள் பாடியதற்கு ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரின் பங்களிப்பு இல்லையா... பாடல் எழுதிய சந்திரபோஸ் காரணமாக இல்லையா... என பதிவிட்டிருந்தனர். இந்த நிலையில் ரசிகர்களின் கமென்டிற்கு பாடகர் கால பைரவா பதிவிட்டுள்ளார். மேலும் அவர்கள் குறிப்பிட்ட பெயர்களை அவர் குறிப்பிடாததற்காக மன்னிப்பு கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் , "நாட்டு நாட்டு மற்றும் ஆர்.ஆர்.ஆர் பட வெற்றிக்கு ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரும் காரணம் தான். அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆஸ்கர் மேடை நிகழ்ச்சிக்கான வாய்ப்பைப் பெறுவதற்கு யார் உதவினார்கள் என்று மட்டுமே நான் குறிப்பிட்டிருந்தேன். மற்றபடி வேறொன்றுமில்லை. நான் குறிப்பிட்டது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ராஜமௌலி இயக்கியிருந்த இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கடந்த ஆண்டு வெளியான இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் வசூலிலும் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.