Skip to main content

"நிச்சயம் ஆர்.ஆர்.ஆர் ஆஸ்கர் வெல்லும்" - ஏ.ஆர். ரஹ்மான் நம்பிக்கை

Published on 25/01/2023 | Edited on 25/01/2023

 

ar rahman about rrr get nominated in oscar 2023

 

உலகத் திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் விருது விழா வருகிற மார்ச் மாதம் 12 ஆம் தேதி அமெரிக்காவில் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான நாமினேஷன் பட்டியலை வெளியிட்டுள்ளது ஆஸ்கர் அமைப்பு. 

 

இறுதி செய்யப்பட்ட நாமினேஷன் லிஸ்டில் இந்தியா சார்பில் சிறந்த சர்வதேச திரைப்படம் என்ற பிரிவிற்காக அனுப்பப்பட்ட குஜராத்தி படமான 'செல்லோ ஷோ' படம் இடம்பெறவில்லை. இருப்பினும் தனிப்பட்ட முறையில் 15 பிரிவுகளின் கீழ் அனுப்பப்பட்ட ராஜமௌலியின் 'ஆர்.ஆர்.ஆர்' படம் சிறந்த பாடல் என்ற 1 பிரிவில் 'நாட்டு நாட்டு' பாடல் இடம்பெற்றது. இந்தியாவில் டெல்லியின் பின்னணியில் எடுக்கப்பட்ட ஆல் தட் பிரீத்ஸ் (All That Breathes) என்கிற ஆவணப்படம் சிறந்த ஆவணப்படங்களுக்கான பிரிவிலும்,  தமிழ்நாட்டில் முதுமலை பகுதியில் ஒரு குட்டி யானைக்காக தங்களது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட இரு பழங்குடிகளைப் பற்றிய ஆவணப்படமான 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' (The Elephant Whisperers) ஆவணக் குறும்படப் பிரிவிலும் இடம்பெற்றிருந்தது.

 

இந்த நிலையில் ஆஸ்கர் நாமினேஷன் லிஸ்டில் இடம்பெற்ற படங்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்கர் விருது பெற்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்  'ஆர்.ஆர்.ஆர்' படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "வாழ்த்துக்கள் கீரவாணி. நிச்சயம் நீங்கள் ஆஸ்கர் விருதை சந்திர போஸுடன்  வெல்வீர்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே ரசிகர்கள் பலரும்  'ஆர்.ஆர்.ஆர்'  படம் நிச்சயம் ஆஸ்கர் விருது வெல்லும் என பதிவிட்டு வரும் நிலையில் தற்போது ஏ.ஆர். ரஹ்மானும் பதிவிட்டிருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

 

இதனிடையே, சந்திரபோஸ் வரிகள் எழுதிய 'நாட்டு நாட்டு' பாடலுக்காக பாடலின் இசையமைப்பாளர் கீரவாணி ஆஸ்கருக்கு அடுத்த படியாக கருதப்படும் கோல்டன் க்ளோப் விருதை சமீபத்தில் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜப்பானில் ராஜமெளலி படம் எடுத்த புதிய பரிணாமம்

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
rajamouli rrr at japan

ராஜமௌலி இயக்கத்தில் 2022ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். டிவிவி தானையா தயாரித்திருந்த இப்படம் கிட்டத்தட்ட ரூ.1200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்திற்கு கீரவாணி இசையமைத்திருந்த நிலையில் 'நாட்டு நாட்டு' பாடல் திரைத்துறையில் உயரிய விருதாகப் பார்க்கப்படும் ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றது. மேலும் ஆஸ்கர் பெற்ற முதல் இந்தியப் படம் என்ற பெருமையைப் பெற்றது. 

இந்த நிலையில் ஜப்பானில் இப்படத்தின் சிறப்பு திரையிடல் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதனால் தனது குடும்பத்துடன் ஜப்பான் சென்ற ராஜமௌலி, சிறப்பு திரையிடலில் கலந்து கொண்டு உரையாடினார். பின்பு அவருக்கு 83 வயது மூதாட்டி ஒருவர், 1,000 ஓரிகமி கிரேன்களை பரிசாக வழங்கினார். அந்த சிறப்பு பரிசு குறித்து நெகிழ்ச்சியுடன் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ராஜமௌலி, “இது விலைமதிப்பில்லாத பரிசு” என குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து கடந்த 21ஆம் தேதி அங்கு நிலநடுக்கத்தை உணர்ந்ததாக தெரிவித்திருந்தார். 

இதனை தொடர்ந்து தற்போது ஆர்.ஆர்.ஆர் படத்தை ஜப்பானிய பெண்கள் நாடகமாக அரங்கேற்றியதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “110 வருட பழமையான தகராசுகா நிறுவனத்தால் எங்கள் ஆர்.ஆர்.ஆர் படம் இசை நாடகமாக அரங்கேற்றப்பட்டது எனக்கு பெருமை. படத்தைப் போலவே நாடகத்தையும் ஏற்றுக்கொண்ட ஜப்பானிய பார்வையாளர்களுக்கு நன்றி. உங்கள் வரவேற்பால் மனம் நெகிழ்ந்தேன்” எனக் குறிப்பிட்டு அந்த நாடகத்தில் நடித்த பெண்களுக்கு நன்றி தெரிவித்தார். 

ராஜமௌலி அடுத்ததாக மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்கவுள்ளார். இப்படத்திற்கான கதை உருவாக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இப்படம் மட்டுமல்லாமல் ஆர்.ஆர்.ஆர் பட இரண்டாம் பாகமும் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

25 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த கூட்டணி

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
ar rahman prabhu deva movie update

பிரபுதேவா தற்போது விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கேரளாவில் தற்போது படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், பிரபுதேவா ஹீரோவாக நடிக்கும் புதுப் பட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. மனோஜ் என்.எஸ். இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை மனோஜ் என்.எஸ், திவ்யா மனோஜ், பிரவீன் இலக் உள்ளிட்ட மூன்று பேர் இணைந்து தயாரிக்கின்றனர். பிகைண்ட்வுட்ஸ் நிறுவனம் வழங்குகிறது. யோகி பாபு, அஜுவர்கிஸ், அர்ஜுன் அசோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். 25 வருடங்களுக்குப் பிறகு பிரபுதேவா படத்திற்கு இசையமைக்கிறார். 

ar rahman prabhu deva movie update

ஏற்கனவே ஏ.ஆர். ரஹ்மான் - பிரபு தேவா இருவரும் காதலன், லவ் பேர்ட்ஸ், மிஸ்டர் ரோமியோ, மின்சாரக் கனவு உள்ளிட்ட படங்களுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் பல பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.