அப்போது இயக்குனர் மிஷ்கின் பேசுகையில், “இயக்குனர் ராம் என்னை தொடர்புகொண்டு நாம் எடுக்க நினைத்த படத்தை ஒரு பெண் எடுத்திருக்கிறார் என்று சொன்னார். சரி அந்த படத்தை பார்க்கலாம் என்று போனேன். ராம் சொன்னால் நல்லாருக்குமே என்று நினைத்து போய் பார்த்தால் கைலியிலும் சட்டையிலும் நின்ற பெண் இயக்குனரை பார்த்தவுடன் இந்தப்படம் நல்லாருக்காது என்று முடிவு செய்து விட்டேன். இவர் என்ன படம் எடுத்து விடுவார் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டேதான் அந்த படத்தை பார்த்தேன்.
முதலில் பெரும் தலைவலியுடன் தான் இந்தப்படத்தை பார்க்க ஆரம்பித்தேன். படம் பார்த்தபோது என்னை நானே செருப்பால் அடித்தது போல் இருந்தது. நான் என்ன படம் எடுக்கிறேன் என கூச்சமாக இருந்தது. படம் பார்த்தவுடன் என் அம்மா அப்பா நியாபகம் வந்து விட்டது. அவர்களை பார்க்க வேண்டும் என ஆசையாக இருந்தது. நானும் என் தம்பியும் இந்த வார இறுதியில் அவர்களை பார்க்க போகிறோம். அவர்களை நன்றாகதான் கவனிக்கிறேன். என் தந்தை தான் எனக்கு சினிமாவை அறிமுகப்படுத்தியவர். அவருக்கு நடிக்க வேண்டும், இயக்குனராக வேண்டும் என்றெல்லாம் ஆசை இருந்தது.
அவரை பார்த்து கொள்வதை மறந்து விட்டேன். நம் அம்மா அப்பாவை பார்த்து கொள்ள வேண்டும் என சொல்லிக்கொடுக்கும் படம் இது. ஒரு கெட்ட படம் விசிலடித்துவிட்டு செல்லவைக்கும் ஆனால் ஒரு நல்ல படம் நம் மனசைக் கழுவும். நான் தண்ணி அடிப்பதை விட்டுவிட்டேன். அது மட்டும் அடித்திருந்தால் நைட்டோட நைட்டா அவர் வீட்டிற்கு சென்று காலில் விழுந்திருப்பேன். ராம், வெற்றி, நான் எல்லாம் இந்த படம் குறித்து சொல்கிறோம் இவர்கள் சரியான வில்லங்கமான ஆளாச்சே என்று யோசிக்காதீர்கள். நாங்கள் சொல்வதால் அல்ல உண்மையில் இந்தப்படம் சத்தியம். வாழ்வை வாழச்சொல்லி கொடுக்கும் படம். இந்திய சினிமாவில் முதல் மூன்று இடங்களில் இந்தப்படம் இருக்கும். அன்பை சொல்லும் படம். இந்த நாடும் நகரங்களும் நம்மை அம்மா அப்பாவை விட்டு பிரிக்கிறது. நாம் நகரத்தை நோக்கி நகர்ந்து விட்டோம்.
நமக்கு பல பாடங்களை சொல்லி தரும் படம். இந்தப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும். தமிழகத்தில் ஆறு ஏழு நகரங்களில் இந்தப்படத்தின் போஸ்டரை என் செலவில் ஒட்டப்போகிறேன். இது இந்தப்படத்திற்கு எனது நன்றிக்கடன். இந்தப்படம் என்னை மாற்றியது. இந்தப்படத்தை பாருங்கள் உங்கள் அம்மா அப்பாவை நேசிப்பீர்கள்” என்றார்.