ADVERTISEMENT

சுஷாந்தின் தங்கைகள்  மீதான  வழக்கு -சி.பி.ஐ.க்கு பதிலடி தந்த மும்பை போலீஸ்..

01:56 PM Nov 03, 2020 | rajapathran@na…

ADVERTISEMENT

இந்தி திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட், கடந்த ஜூன் 14 ஆம் தேதி மும்பையில் தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்குத் தொடர்பான விசாரணையின்போது சுஷாந்த் சிங் மரணத்தில் போதைப் பொருள் சம்மந்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, சுஷாந்தின் காதலி ரியா சக்ரபோர்த்தி மற்றும் அவர் உட்பட பத்துக்கும் மேற்பட்டோர்களைக் கைது செய்தது. இருபத்தியெட்டு நாட்களுக்குப் பிறகு, கடந்த 7 ஆம் தேதி ஜாமீனில் வெளிவந்தார் ரியா.

ADVERTISEMENT

இதற்கிடையே சுஷாந்த் சிங்கின் தங்கைகள் பிரியங்கா சிங் மற்றும் மற்றும் மீட்டு சிங் மீது ரியா சக்கரபோர்த்தி, சுஷாந்தின் மன அழுத்தத்திற்கு மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல், மருத்துவ விதிமுறைகளுக்குப் புறம்பான மற்றும் தடை செய்யப்பட்ட மருந்துகளை அளித்ததாக மும்பை போலீசிடம் புகாரளித்தார். மேலும், இந்த மருந்துகளை வாங்க பொய்யான மருந்து சீட்டு தயாரித்து அளித்ததாக தருண்குமார் என்ற டாக்டர் மீதும் புகாரளித்திருந்தார். இந்தப் புகாரின் பேரில் மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின் இந்த வழக்கும், சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான எல்லா வழக்கையும் சி.பி.ஐயே விசாரிக்கவேண்டும் எனும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில், தங்களுக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய வேண்டுமென, சுஷாந்தின் தங்கைகள் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கில் ரியா சக்கரபோர்த்தி பிரமாணப் பாத்திரம் தாக்கல் செய்தார். அதில் ரியா சக்ரபோர்த்தி, சுஷாந்த்துக்கும் அவரது தங்கைக்கும் நடைபெற்ற உரையாடலைக் குறிப்பிட்டு, "மருத்துவ விதிகளுக்குப் புறம்பாக, அவர் தங்கை பிரியா சிங்கும் டாக்டர் தருண்குமாரும் வழங்கிய மன அழுத்த நோய் மருந்துகளை எடுத்துக்கொண்ட ஐந்து நாட்களுக்குப் பிறகுதான் சுஷாந்த் சிங் மரணமடைந்துள்ளார். எனவே அவர்கள் அளித்த மருந்துகள், சுஷாந்தின் மரணத்திற்குக் காரணமாகிவிட்டதா அல்லது அவரது மனநிலையை மேலும் பாதித்துவிட்டதா என விசாரிக்க வேண்டும். ஆதலால் சுஷாந்தின் தங்கைகள் மீதும் டாக்டர் தருண்குமார் மீதும் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கூடாது" எனக் கூறியிருந்தார்.

இந்தநிலையில் சுஷாந்தின் தங்கைகள் தொடர்ந்த அந்த வழக்கு, சில நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ, "சுஷாந்த் சிங்கின் சகோதரிகள் மீதான குற்றச்சாட்டுகள், அனுமானம் மற்றும் யுகத்தின் அடிப்படையிலானது. அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்திருக்கக்கூடாது. வழக்கு பதிவிற்கு முன்பு விசாரணை நடத்தப்பட்டிருக்க வேண்டும் ஆனால் விசாரணை நடத்தப்படவில்லை. மேலும் சுஷாந்த் மரணம் தொடர்பாக நாங்கள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறபோது, அது தொடர்பாக மும்பை போலீஸ் இன்னொரு வழக்கை பதிவு செய்திருப்பது சட்டப்படி தவறு மற்றும் தேவையற்றது. ரியாவின் புகாரை, மும்பை போலீசார் எங்களுக்கு அனுப்பியிருக்க வேண்டும்" என வாதிட்டது. இந்தநிலையில் நேற்று மும்பை போலீஸ் இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்தது. அந்த பதில் மனுவில், சுஷாந்த் தங்கைகள் மீது வழக்கு பதிவு செய்தது எங்களது கடமை என சிபிஐக்கு, மும்பை போலீஸ் பதிலடி தந்துள்ளது.

மும்பை போலீஸ் தனது பதில் மனுவில், "ரியா சக்கரபோர்த்தி அளித்த தகவல்களின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சுஷாந்த் சிங்கிற்கு, பொய்யான மருத்துவ பரிந்துரை, ஒரு மருத்துவரின் உதவியோடு வழங்கப்பட்டிருக்கிறது. உரிய மருத்துவ பரிசோதனை இல்லாமலேயே அவருக்கு மனநல மருந்துகள் தரப்பட்டிருக்கிறது. இது அவருக்கு மரணத்தை ஏற்படுத்தியிருக்கலாம் அல்லது அவரின் மரணத்திற்கு காரணமாக இருக்கலாம். இது போன்ற குற்றத்தை பற்றிய தகவல்களை ஒருவர் தரும்போது எவ்வித விசாரணையுமின்றி வழக்குப்பதிவு செய்யலாம். எனவே ரியா சக்ரபோர்த்தி அளித்த தகவலின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்தது எங்களது கடமை" என கூறியுள்ளது. மேலும் ஒரே சம்பவம் தொடர்பாக இரண்டு வழக்கு பதிவு என்ற சி.பி.ஐயின் குற்றச்சாட்டையும் மும்பை போலீஸ் தனது பதில் மனுவில் மறுத்துள்ளது. சிபிஐ விசாரித்து வருவது சுஷாந்தின் தந்தை ரியா சக்ரபோர்த்தி அளித்த புகார் என்றும், நாங்கள் பதிவு செய்தது சுஷாந்தின் தங்கைகள் மீதான ஏமாற்றுதல், மோசடி, மற்றும் குற்றச்சதி ஆகிய குற்றசாட்டுகள் மீதான வழக்கு என்றும் மும்பை போலீஸ் பதில் மனுவில் கூறியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT