rhea

இந்தி திரைப்பட நடிகரும் தோனி வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் மூலம் புகழ்பெற்றவருமான சுஷாந்த் சிங், கடந்த ஜூன் 14 ஆம் தேதி மும்பையில் தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மும்பை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். சுஷாந்த் சிங் மரணத்திற்கு அவரது காதலியும் நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி மீது சுஷாந்தின் தந்தை, பாட்னா போலீசாரிடம் புகார் அளித்தார்.

Advertisment

இந்த வழக்கை பாட்னா போலீசார்விசாரித்து வந்தனர். பிறகு சுஷாந்த் சிங் மரணம் தொடர்பானவழக்கு உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்குத் தொடர்பான விசாரணையின்போது சுஷாந்த் சிங் மரணத்தில் போதைப் பொருள் சம்மந்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, ரியாசக்ரபோர்த்தி மற்றும் அவர் சகதோரர் உட்பட பத்துக்கும் மேற்பட்டோர்களைக் கைது செய்தது. இருபத்தியெட்டு நாட்களுக்குப் பிறகு,கடந்த 7 ஆம் தேதி ஜாமீனில் வெளிவந்தார் ரியா.

Advertisment

இதற்கிடையே சுஷாந்த் சிங்கின் தங்கைகள் பிரியங்கா சிங் மற்றும் மற்றும் மீட்டு சிங் மீது ரியா சக்கரபோர்த்தி, சுஷாந்தின் மன அழுத்தத்திற்கு மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல், மருத்துவ விதிமுறைகளுக்குப் புறம்பான மற்றும் தடை செய்யப்பட்ட மருந்துகளை அளித்ததாக மும்பை போலீசிடம் புகாரளித்துள்ளார். மேலும், இந்த மருந்துகளை வாங்க பொய்யான மருந்து சீட்டு தயாரித்து அளித்ததாக தருண்குமார் என்ற டாக்டர் மீதும் புகாரளித்திருந்தார். இந்தப் புகாரின் பேரில் மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின் இந்த வழக்கும், சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான எல்லா வழக்கையும் சி.பி.ஐயே விசாரிக்கவேண்டும் எனும்உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி இந்த வழக்கும் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில், தங்களுக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய வேண்டுமெனவும், சுஷாந்தின் தங்கைகள் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கில் நேற்று ரியா சக்கரபோர்த்தி பிரமாணப் பாத்திரம் தாக்கல் செய்தார். அதில், சுஷாந்த்துக்கும் அவரது தங்கைக்கும் நடைபெற்ற உரையாடலைக் குறிப்பிட்டு, "மருத்துவ விதிகளுக்குப் புறம்பாக, அவர் தங்கை பிரியா சிங்கும் டாக்டர் தருண்குமாரும் வழங்கிய மன அழுத்த நோய் மருந்துகளை எடுத்துக்கொண்ட ஐந்து நாட்களுக்குப் பிறகுதான் சுஷாந்த் சிங் மரணமடைந்துள்ளார். எனவே அவர்கள் அளித்த மருந்துகள், சுஷாந்தின் மரணத்திற்குக் காரணமாகிவிட்டதா அல்லது அவரது மனநிலையை மேலும் பாதித்துவிட்டதா என விசாரிக்க வேண்டும். ஆதலால் சுஷாந்தின் தங்கைகள் மீதும் டாக்டர் தருண்குமார் மீதும் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கூடாது" எனக் கூறியுள்ளார்.

Advertisment