Skip to main content

மதம் ஒரு போதை பொருள்...? மலையாள சினிமாவின் தைரியம்!!! பக்கத்து தியேட்டர் #10

Published on 04/03/2020 | Edited on 11/06/2020

கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட 'ட்ரான்ஸ்' திரைப்படம். 2019ஆம் ஆண்டில் மார்ச் மாதம் வெளியாகிவிடும், ஈத் பண்டிகைக்கு வெளியாகிவிடும், டிசம்பர் வெளியாகிவிடும் என பல வெளியீட்டு தேதிகள் அறிவிக்கப்பட்டு இறுதியில் 2020ஆம் ஆண்டு காதலர் தினத்தன்று கன்ஃபார்மாக ரிலீஸாகிவிடும் என்று படக்குழுவால் அறிவிக்கப்பட்டது. அவர்களின் நேரமோ என்னமோ தெரியவில்லை அதுவும் கடைசி நேரத்தில் கேரள தணிக்கை குழுவால் தடைப்பட்டது. 'இந்தப் படத்தில் மத ரீதியாக குறிப்பிட்ட சாராரை புண்படுத்தும் வண்ணமாக காட்சிகள் இடம்பெற்றுள்ளன, அதனால் 17 நிமிடங்கள் வரை படத்தில் கட் செய்ய வேண்டும். இல்லையென்றால் மும்பைக்கு சென்று ரிவைஸிங் கமிட்டியில் படத்தை காட்டி தணிக்கை வாங்கிக்கொள்ளுங்கள்' என்றது தணிக்கை குழு. அதன் பிறகும் காட்சிகளை கட் செய்ய இஷ்டமில்லாத இயக்குனர் அன்வர் ரஷீத் ரிவைஸிங் கமிட்டியிடம் படத்தை காட்டி தணிக்கை வாங்கி பின்னர் படம் ஃபிப்ரவரி 20ஆம் தேதி கேரளாவில் வெளியானது. அதன்பின் ஃபிப் 28ஆம் தேதி மற்ற மாநிலங்களில், நாடுகளில் வெளியானது, ஃபகத் ஃபாசில் நடிப்பில் கடந்த ஒரு வருடமாக பலரையும் எதிர்பார்ப்பில்  வைத்திருக்கும் இந்த ‘ட்ரான்ஸ்’ திரைப்படம்.
 

trance

 

 

படத்தின் விமர்சனத்திற்குப் போவதற்கு முன்பாக இந்தப் படத்தின் தலைப்பான ட்ரான்ஸின் அர்த்தம் என்ன என்பதை உங்களுக்கு சொல்லிவிடுகிறேன் (அர்த்தம் தெரிந்தவர்கள் பொறுத்துக்கொள்ளவும்). 'ட்ரான்ஸ்' என்றால் தன்னைச் சுற்றி நடப்பனவற்றில் கவனம் செல்லாத மன நிலை; மெய்மறந்த நிலை என்று சொல்வார்களே அதுதான். சிறுவயதிலேயே தாயை இழந்து, மனநலம் பாதிக்கப்பட்ட  தம்பியுடனும் மிகப்பெரிய மோட்டிவேஷனல் ஸ்பீக்கராகுவேன் என்று நம்பிக்கையுடனும் வாழ்க்கை ஓட்டத்தை விழுந்து புரண்டு  உருண்டோடும் விஜு பிரகாஷாக ஃபகத் ஃபாசில் நடித்திருக்கிறார். தன் தம்பி இறந்தவுடன் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துக்கத்திலும் தூக்கமின்றியும் வாடும் ஃபகத், மும்பைக்கு சென்று பிழைத்துக்கொள்ளலாம் என செல்கிறார். அதன்பின் கௌதம் மேனன், செம்பன் ஜோஸ் ஆகியோரை சந்திக்கிறார். ஃபகத்தின் வாழ்க்கையில் மிராக்கல் நடைபெறுகிறது. மக்களுக்கு தன்னுடைய பிரேயரின் மூலம் மிராக்கல்ஸ் உண்டாக்கும் போலி பாஸ்டராக மாறுகிறார். அதன்பின் அவர் நினைத்து பார்க்காதது போல வாழ்க்கையில் பல மிராக்கல்ஸ் நிகழ்கிறது, அவருக்கு மட்டும்தான் பக்தர்களுக்கு அல்ல. இதன்பின் அவருடைய வாழ்க்கையில் சில சறுக்கல்கள்... தவிர்க்க முடியாத பாஸ்டராக மக்கள் மனதில் இடம்பிடிக்க, அவர்களின் சந்தேகமற்ற நம்பிக்கையால் பல கோடிகளுக்கு சொந்தக்காரராகிறார். கதைப்படி அவரை ஆட்டுவிக்கும் இயக்குனர்களாக இருப்பவர்கள் கௌதம் மற்றும் செம்பன். இந்த நிலை தொடர்ந்ததா, மாறியதா? இதன்பின் என்ன ஆனது என்பதுதான் கதை!

இந்தப் படத்தின் தலைப்பான ‘ட்ரான்ஸ்’... அதன் பொருளை மையப்படுத்திதான் திரைக்கதை, ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு படத்தொகுப்பு முதலியானவற்றை செய்திருக்கிறார்கள். போதை பழக்கத்திற்கு ஆளானவர்களுக்கு, அல்லது அவர்களை நன்கு அறிந்தவர்களுக்கு  'ட்ரான்ஸ்' பாடல்கள் குறித்து தெரிந்திருக்கும். கலைடாஸ்கோப்பில் வருவதுபோன்ற சித்திரத்தில், ஒரு மயக்கமான நிலைக்கு கொண்டு செல்லும் வித்தியாசமான இசை என அனைத்துமே ஒரு மாயை போல உணரவைக்கும் இசை. அந்த இசையுடன் வரும் வீடியோதான் ட்ரான்ஸ் வீடியோ பாடல். அதுபோன்ற டெக்னிக்கைதான் இப்படத்திலும் பயன்படுத்தியிருக்கிறார்கள். மேலும் சில இடங்களில் பார்ப்பவர்களின் மன ஓட்டத்தை விறுவிறுப்பாக்கும் வகையிலும், குழப்பம், ஆர்வம் என பல எமோஷன்ஸ் நம்மை ஆட்கொள்ளும் வகையிலும் படத்தொகுப்பை கையாண்டிருக்கிறார்கள். ஒளிப்பதிவிலும் வித விதமான ஆங்கிளில் காட்சிப்படுத்த எடுக்கப்பட்ட மெனக்கெடலுக்கு சமமாக கலர் கிரேடிங்கிற்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள் என்பது படத்தை பார்க்கும்போது தெரிகிறது. ரசூல் பூக்குட்டியின் சவுண்ட் டிசைனிங் திறமைக்கு தீனி  போடும் வகையில் இந்தப் படத்தின் கான்செப்டும் இருப்பதால் செமயாக பண்ணியிருக்கிறார் ரசூல்.
 

trance


படத்தின் முதல் பாதி சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாத வகையில் வேகமான ஓட்டத்துடன் மக்களை கவரும் வண்ணம் எடுக்கப்பட்டிருந்தது. நாம் நாள்தோறும் பார்த்து குழம்பும் விஷயங்களின் நாம் அறியாத பக்கங்களை ஆச்சரியப்படும் வகையில் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். கிருத்துவ மதத்தில் உள்ள சில போலி மத போதகர்கள் செய்யும் கூத்தை நேரடியாக பேசியிருக்கிறார்கள். ஆனால், இரண்டாம் பாதி அதற்கு நேர் மாறாக மெதுவான தொலைதூரப் பயணமாக துவளவைத்துவிடுகிறது. இந்தப் பயணத்திற்கு முட்டுக்கட்டைபோட்டு வேறு பாதைக்கு திருப்பிவிட்டு, மீண்டும் முதலில் பயணித்த ரோட்டிற்கு அழைத்து வருவதுபோல இரண்டாம் பாதியில் அமைக்கப்பட்ட விநாயகத்தின் துணைக் கதை தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டிருந்தவர்களின் பொறுமையை மேலும் சோதித்தது.

ஃபகத்தின் சினிமா கிராஃப், ஒவ்வொரு படத்திலும் அவர் நடிக்கும் கதாபாத்திரங்களாலும் அதற்கு அவர் கொடுக்கும் நியாயமான நேர்த்தியான நடிப்பினாலும் உயர்ந்துகொண்டே இருக்கிறது. இந்தப் படத்தில் மலையாள சினிமாவின் நல்ல நடிகர்களான சௌபின் சாஹிர், செம்பன் ஜோஸ், திலீஷ் போத்தன், விநாயகம் என ஒட்டுமொத்தமாக நடித்திருந்தபோதிலும் ஃபகத் தனியாக இவர்கள் அனைவரின் நடிப்பையும் மிஞ்சிவிட்டார். இயக்குனராகப் பார்த்து வந்த ஸ்டைலிஷ் கௌதமை, 'ஸ்வாகா'ன (swag) வில்லனாகக்  காட்டியிருக்கிறார் இப்படத்தின் இயக்குனர் அன்வர் ரஷீத். இரண்டு வருடங்கள் கழித்து நடிக்க வந்திருக்கும் நஸ்ரியா தனக்குக்  கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை திறம்பட செய்திருக்கிறார். 

இயக்குனர் அன்வர் ரஷீதை பலரும் பாராட்டுகிறார்கள், விமர்சிக்கவும் செய்கிறார்கள். காரணம், இந்தப் படத்தில் மதத்தை ஒரு போதைப்பொருளாக ஒரு கூட்டம் பயன்படுத்தி மக்களுக்கு அதை பழக்கப்படுத்தி காசு பார்க்கிறார்கள் என்பதை தைரியமாக எடுத்ததுதான். அந்தப் பாராட்டும், விமர்சனமும் இப்படத்தின் கதை திரைக்கதை எழுதிய வின்செண்ட் வடக்கனுக்கும் சேர வேண்டும். படம் எப்படி என்று கேட்டால் பலரும் பல விதமாக கலவையான விமர்சனங்களையே இந்தப் படத்தின் மீது வைக்கிறார்கள். அதைத்தான் நானும வைக்கிறேன். ஆனால், இந்தப் படத்தில் பல விஷயங்களை மறைமுகமான பொக்கிஷத்தை போல ஒளித்து வைத்திருக்கிறார் இயக்குனர். இந்தப் படம் போகப் போக அனைவருக்கும் புரியலாம். அப்படி காலம் ஓடிய பின் கொண்டாடப்படும் படங்கள் பல இருக்கின்றன. அந்த வரிசையில் ட்ரான்ஸும் இடம் பிடிக்கும்  என்று தோன்றுகிறது.
 

fahath fazil

 

 

எது எப்படியோ... இந்தப் படத்தின் மூலம் இரண்டு விஷயங்கள் உறுதியாகின்றன. ஒன்று, மதத்தின் பெயரால் நடக்கும் வியாபாரத்தை, கூத்தை, இதுவரை வேறு எந்த மொழியிலும் சொல்லாத விதத்தில் சொல்லியிருக்கும் தைரியம் அவர்களுக்கே உரியது. இன்னொன்று   இத்தனை பெரிய நடிகர்களை வைத்துக்கொண்டு தைரியமாக ஒரு படத்தை சோதனை முயற்சிபோல செய்ய மலையாள சினிமாவால்தான் முடியும். இந்திய சினிமாத்துறைகளில் மலையாள சினிமாவின் வளர்ச்சியானது தென்கொரிய சினிமா வளர்ந்திருப்பதுபோல எதிர்காலத்தில் வளரும் என்பதை ட்ரான்ஸ், ஜல்லிக்கட்டு போன்ற மலையாள படைப்புகள் நமக்கு உணர்த்துகின்றன.


முந்தைய படம்: மலையாளத்தில் ஒரு 'சைக்கோ' படம்! இது எப்படி இருக்கு? பக்கத்து தியேட்டர் #9

அடுத்தப் படம்: மோடியுடன் மீண்டும் மோதும் அனுராக் காஷ்யப்! சோக்ட் : பைசா போல்தா ஹை... பக்கத்து தியேட்டர் #11

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆக்‌ஷன் கதைக்களம் வென்றதா? ‘ஜோஷ்வா இமை போல் காக்க’ விமர்சனம்!

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
Joshua imai pol kaakha movie review

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு கௌதம் மேனன் இயக்கத்தில் ரிலீசாகி இருக்கும் திரைப்படம் ஜோஷ்வா இமை போல் காக்க. பொதுவாக காதல் படங்களையும் அதில் ஆக்‌ஷன் காட்சிகளையும் சேர்த்து கொடுக்கும் கௌதம் மேனன் இந்த முறை முழுக்க முழுக்க ஆக்‌ஷன் திரைப்படம் மூலம் ரசிகர்களை மகிழ்விக்க முயற்சி செய்திருக்கிறார். அந்த முயற்சியில் அவருக்கு வரவேற்பு கிடைத்ததா, இல்லையா?இன்டர்நேஷனல் காண்ட்ராக்ட் கில்லர் ஆக இருக்கும் பிக் பாஸ் வருண் ஒரு நிகழ்வில் நாயகி ராஹியை சந்திக்கிறார். இருவருக்கும் காதல் மலர்கிறது. தான் ஒரு காண்ட்ராக்ட் கில்லர் என்ற உண்மையை ராஹியிடம் வருண் கூற, ராஹி காதலை முறித்துக் கொண்டு அமெரிக்கா சென்று விடுகிறார். இதற்கிடையே ஒரு மெக்சிகன் போதைப் பொருள் கடத்தல் தாதா போலீசில் சிக்கி விடுகிறார். அவருக்கு எதிராக வாதாட வக்கீல் ஆக களம் இறங்கும் ராஹியை கொல்ல மொத்த கடத்தல் கார கும்பலும் போட்டி போட்டுக் கொண்டு படையெடுக்கின்றனர். ராஹியை காப்பாற்ற கில்லர் வருண் நியமிக்கப்படுகிறார். அவர் தன் காதலியை கொலைகாரர்களிடமிருந்து காப்பாற்றினாரா, இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை. 

பொதுவாக காதல் படங்களில் ஆக்‌ஷன் காட்சிகளை வைத்து ரசிக்க வைக்கும் கௌதம் மேனன் இந்த முறை முழுக்க முழுக்க ஒரு ஆக்‌ஷன் திரைப்படத்தை கொடுத்து இருக்கிறார். படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை 10 நிமிட இடைவெளியில் தொடர்ந்து சண்டை காட்சிகள் படம் முழுவதும் வருகிறது. விறுவிறுப்பாக செல்லும் இத்திரைப்படம் போகப்போக வேகம் எடுத்து இறுதியில் ஒரு திருப்பத்தோடு முடிந்து ரசிக்க வைத்திருக்கிறது. இருந்தும் ஒரு கதையாக பார்க்கும் பொழுது பெரிதாக எதுவுமே இல்லாமல் வெறும் ஆக்‌ஷன் காட்சிகளை மட்டுமே நம்பி இப்படத்தை கொடுத்திருக்கிறார் கௌதம் மேனன். அதற்கு முதல் பாதியில் நல்ல பலனும் இரண்டாம் பாதியில் சற்றே அயற்சியுடன் கூடிய பலனும் கிடைத்திருக்கிறது. முதல் பாதையில் இருந்த வேகமும் விறுவிறுப்பும் இரண்டாம் பாதியில் சற்றே மிஸ்ஸிங். அதேபோல் வெறும் ஆக்‌ஷன் காட்சிகள் மட்டுமே படம் முழுவதும் வருவது சில இடங்களில் சலிப்பு ஏற்படுத்துகிறது. இருந்தும் ஆக்‌ஷன் காட்சிகளை காட்சிப்படுத்திய விதமும் அதற்குள் வரும் காதல் காட்சிகளும் சிறப்பாக அமைந்து படத்தை கரை சேர்க்க உதவி இருக்கிறது.

நாயகன் வரும் தன் உடல் பொருள் ஆவி என அனைத்தையும் கொடுத்து இப்படத்தில் நடித்திருக்கிறார். மற்ற அனைத்து காட்சிகளையும் தவிர ஆக்‌ஷன் காட்சிகளில் சிறப்பாக பங்களிப்பு கொடுத்திருக்கிறார். குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகள் மிகவும் ஸ்டைலிஷ் ஆக காட்சிப்படுத்தப்பட்டிருப்பது அவருக்கு மாஸாக இருக்கிறது. அதற்கேற்றார் போல் தன் உடல்வாகை மாற்றிக் கொண்டு சிறப்பான ஆக்‌ஷன் காட்சிகளை உருவாக்க உதவி புரிந்திருக்கிறார். இவரது கமிட்மென்ட் நன்றாகவே தெரிகிறது. நாயகி ராஹி வழக்கமான கதாநாயகி கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் சின்ன சின்ன உடல் மொழி, வசன உச்சரிப்பு, முகபாவனைகள் என நடிப்பில் பாஸ் மார்க் வாங்கி இருக்கிறார். இவருக்கும் வருணுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. சொல்லப்போனால் நாயகனைக் காட்டிலும் நாயகி சிறப்பாக நடித்திருக்கிறார். சில காட்சிகளே வந்தாலும் மனதில் பதியும்படியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். விஜய் டிவி புகழ் டிடி, ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வரும் ஆர்டர் கொடுக்கும் பாட்டி கதாபாத்திரத்தை போல், இந்த படத்தில் நடித்திருக்கும் டிடி அந்த கதாபாத்திரத்திற்கான நியாயம் செய்திருக்கிறார். சில காட்சிகளே வந்தாலும் சிறப்பாக நடித்திருக்கிறார் கிருஷ்ணா. ஒரே காட்சியில் வந்தாலும் மாஸ் காட்டியிருக்கிறார் மன்சூர் அலிகான். மற்றபடி உடன் நடித்த அனைத்து நடிகர்களுமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

எஸ். ஆர். கதிர் ஒளிப்பதிவில் ஆக்‌ஷன் காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கு யானிக் பென்னின் ஸ்டண்ட் கோரியோகிராபி நன்றாக உதவி இருக்கிறது. இவரது ஹாலிவுட் தரமான ஸ்டண்ட் காட்சிகள் படத்திற்கு மிகப் பெரிய பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. பாடகர் கார்த்திக் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இவரது இசையில் நான் ஜோஸ்வா பாடல் கேட்கும் ரகம். அதேபோல் பின்னணி இசையிலும் தேர்ந்த இசையமைப்பாளர் போல் சிறப்பான இசையை கொடுத்திருக்கிறார். பொதுவாக கௌதம் மேனன் படங்கள் என்றாலே பாடல்களும் இசையும் சிறப்பாக இருக்கும். அதை இந்த படத்தில் கார்த்திக் கொடுத்து காப்பாற்றி இருக்கிறார்.

வழக்கமான கௌதம் மேனன் படங்கள் போல் வெறும் வாய்ஸ் ஓவரில் படம் இல்லாமல், முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளை மட்டுமே நம்பி இத்திரைப்படம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவை அனைத்துமே ரசிக்கும்படி இருப்பது படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. ஆங்காங்கே படத்தில் பல லாஜிக் மீறல்கள் இருந்தாலும், படம் சற்று வேகமாக நகர்வது ரசிகர்களுக்கு விறுவிறுப்பைக் கொடுத்துள்ளது.

ஜோஷ்வா - இமை போல் காக்க - அமர்க்களமான ஆக்‌ஷன்!

Next Story

விஜய்யின் கடைசி பட வாய்ப்பு? - கெளதம் மேனன் பதில்

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
gautham menon about vijay

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில், கெளதம் மேனன் இயக்கத்தில், ‘பிக் பாஸ்’ வருண் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘ஜோஷ்வா இமை போல காக்க’. இப்படத்தில் ராக்கே கதாநாயகியாக நடிக்க கிருஷ்ணா, யோகிபாபு, டிடி, மன்சூர் அலிகான், விசித்ரா என பலர் நடித்துள்ளனர். கார்த்திக்  இசையமைத்துள்ளார். மார்ச் 1 அன்று இப்படம் வெளியாகவுள்ளதால் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தது படக்குழு.  

அப்போது கெளதம் மேனன் பேசியதாவது, “நான் என்ன நினைத்தேனோ அதை அப்படியே செய்வதற்கு சுதந்திரம் கொடுத்த தயாரிப்பாளர் ஐசரி சாருக்கு நன்றி. வருண் குழந்தை போலத்தான். 10,15 படங்களில் நடித்துள்ளதால் சொல்கிறேன். கேமரா முன்னால் நின்று, 100 பேர் முன்னால் நடிப்பது எளிதான விஷயம் கிடையாது. அதை எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் நடித்துக் கொடுத்தார் வருண். படத்தில் பாதி இடத்தில் செருப்பு, ஷூ இல்லாமல் நடித்தார்.  கிருஷ்ணாவும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டிடி, கதிர், கார்த்திக் என நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் சிறப்பாக செய்துள்ளனர். உங்களோடு நானும் படம் பார்க்க ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்” என்றார்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இப்படம் என்னுடைய 19வது படம். ரொம்ப மகிழ்ச்சி. துருவ நட்சத்திரம் கண்டிப்பாக வரும். வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகம், தயாரிப்பாளரும் ஹீரோவும் ஒன்று சேரும் போது கண்டிப்பாக இயக்குவேன்” என்றார். விஜய் அரசியல் வருகை தொடர்பான கேள்விக்கு, “அவர் இன்னும் நிறைய படம் நடித்தால் நல்லா இருக்கும். அவரது கடைசி படம் வாய்ப்பு கிடைத்தால் பண்ணுவேன்” என்றார். த்ரிஷா குறித்து முன்னாள் அ.தி.மு.க நிர்வாகி பேசியது சர்ச்சையானது குறித்த கேள்விக்கு, “பெண்களைப் பற்றி யார் பேசினாலும் தப்பு தான்” என்றார்.