Skip to main content

மலையாளத்தில் ஒரு 'சைக்கோ' படம்! இது எப்படி இருக்கு? பக்கத்து தியேட்டர் #9

Published on 09/02/2020 | Edited on 04/03/2020

2018ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் 'ராட்சசன்'. இது ஏற்படுத்திய தாக்கம், வேறு எந்த சைக்கலாஜிக்கல்/ சீரியல் கில்லர் ஜானர் வகையறாக்கள் படம் பார்த்தாலும் அதோடு ஒப்பிட வைக்கிறது. இதன் தாக்கமோ என்னவோ சமீபத்தில் வெளியான 'சைக்கோ' படத்திற்கு கலவையான விமர்சனமே கிடைத்தது. சைக்கோ வெளியான அதே வாரத்தில் மலையாளத்தில் ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லர் வகை படமான ‘அஞ்சாம் பாதிரா’ வெளியாகியுள்ளது. மிதுன் மானுவேல் தாமஸ் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு சமூக வலைதளங்களில் கிடைத்த ஆதரவு, சரி இதை பார்க்கலாம் என்று தோன்றியது.

 

kunjako boban



தமிழக சினிமா ரசிகர்களுக்கு 'வைரஸ்' படத்தின் மூலம் அறிமுகமான குஞ்சாக்கோ போபன்தான் இதில் நாயகன். நாயகன் என்று சொல்வதை விட முக்கிய பாத்திரம் என்று சொல்வதுதான் மலையாளப் படங்களுக்கு சரியாக வரும். அந்த அளவுக்கு பல பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதை எழுதுபவர்கள் அவர்கள். இப்படத்தில் இவர் போலீஸ் அதிகாரிகளின் விசாரணையில் உதவி செய்யும் கிரிமினாலஜிஸ்ட்டாக பணிபுரிந்திருக்கிறார். 'கும்பலாங்கி நைட்ஸ்' புகழ் ஸ்ரீநாத் பாஸியும் இந்தப்  படத்தில் சைபர் ஹேக்கராக நடித்திருக்கிறார். வழக்கம்போல அவருடைய வெகுளியான நகைச்சுவை நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார். டிசிபியாக நடித்திருக்கும் உன்னிமயா பிரசாத், ஏசிபியாக நடித்திருக்கும் ஜினு ஜோசப் என்று படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். மலையாளத்தில் சமகாலத்தின் சிறந்த நடிகர்களாக பெயர் பெற்று வரும் பலரும் படத்தில் இருப்பது பெரும் பலம்.


'அஞ்சாம் பாதிரா' என்றால் ஐந்தாவது நள்ளிரவு என்று அர்த்தம். கொச்சியில் போலீஸ் அதிகாரி ஒருவர் கண்கள் மற்றும் இதயம் பிடுங்கப்பட்டு மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரது உடலருகில் அருகில் கண்கள் கட்டப்படாத ஒரு நீதி தேவதை சிலை கிடைக்கிறது. இந்தக் கொலை குறித்த விசாரணை நடக்கும்போது விசாரணைக்குழுவுடன் இருக்கும் கிரிமினாலஜி  துறை பேராசிரியர் அன்வர், இது ஒரு சாதாரண கொலை அல்ல, ஒரு சைகோவினால் செய்யப்பட்டதாக இருக்கும், இது தொடர வாய்ப்புள்ளது என்று கருதுகிறார். அதுபோலவே இரண்டாவதாக ஒரு போலீஸ்காரரும் கடத்தப்பட்டு, அதே பாணியில் கொல்லப்படுகிறார். இந்தத் தொடர் கொலைகளின் நோக்கம் என்னவாக இருக்கும், ஏன் போலீஸ் அதிகாரிகளை குறி வைக்க வேண்டும் என்பதுதான் 'அஞ்சாம் பாதிரா'.

 

 

anjam padhira



இதுவரை நாம் பார்த்த பெரும்பாலான சைக்கோ/சீரியல் கொலை வகை படங்களில் என்ன டெம்ப்லேட் இருந்ததோ அதில் எதுவும் மிஸ்ஸாகாமல் இந்தப் படத்தில் இருக்கிறது. அதே வரிசையில் காட்சிகள் வருகின்றன. ஆனால், அந்த டெம்ப்லேட்குள்ளேயே நம்மை பதற வைக்கும் கொலை காட்சிகளையும் அதிர வைக்கும் திருப்பங்களையும் உருக வைக்கும் ஃபிளாஷ்பேக்கையும் கொண்டு வந்ததுதான் படத்தின் வெற்றி. இந்த வகையறா படங்களில் திகிலை ஏற்படுத்த சவுண்ட் டிசைன் மற்றும் பின்னணி இசையை ஆயுதமாகக் கையாழுவார்கள். அதை 'ராட்சசன்' படம் பக்காவாகக் கையாண்டிருக்கும். அதைப்போல இதிலும் சரியாகக்  கையாண்டிருக்கிறார்கள். சில இடங்களில் 'ராட்சச'னை நினைவுபடுத்துகிறார்கள். இந்தப் படத்தில் வரும் சைக்கோ வெறும் சைக்கோ அல்ல. அந்தப் பாத்திரத்தின் புத்திக்கூர்மையும் பின்னணியும் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன.


முதல் பாதி விறுவிறுப்பாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதி கொஞ்சம் ஸ்லோவாகத்தான் நகர்கிறது. மலையாளப் படங்களில் நமக்கு புத்துணர்ச்சி அளிப்பவற்றில் முக்கியமாக இருப்பது அந்த நிலப்பரப்பும், கதையில் இருக்கும் யதார்த்தமும்தான். ஆனால், இந்தப் படம் பக்கா கமர்ஷியல் படமாக இருக்கிறது. அதிகமான மலையாள சினிமாக்களில் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களாகப் பார்த்த நமக்கு கொச்சி நகரை முழுவதுமாக மையப்படுத்திக் காட்டிய ஏரியல் ஷாட் புதுமையாக இருந்தது. ஒளிப்பதிவாளர் படத்தை பிரம்மாண்டமாக உணர வைக்கிறார்.

 

 

anjam padhira2



மிஷ்கினின் 'சைக்கோ'வுடன் ஒப்பிட்டு பலரும்இந்தப் படத்தை பாராட்டுகிறார்கள். தமிழ் சைக்கோவில் 'கொலை செய்தது யார்?' என்பது கேள்வியே அல்ல, 'எப்படி எதற்காக' என்பதுதான் முக்கிய புள்ளி. ஆனால் 'அஞ்சாம் பாதிரா'வில் கொலை செய்தது யார், எதற்கு என்ற இரண்டு கேள்விகளும் முதல் பாதி முழுவதும் மிக அழுத்தமாக நம் மனதில் எழ, இரண்டாம் பாதியில் அதற்கான விடைகளும் ஓரளவு திருப்திகரமாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. உலக சினிமாக்களை கண்டு களித்தவர்களுக்கு இது ஒரு ஓகே ரேஞ்ச் படமாகத்தான் இருக்கும். ஆனால், சைக்கலாஜிக்கல் த்ரில்லர் என்கிற ஜானரை மோசம் செய்யாமல் எடுக்கப்பட்டிருக்கும் படம்தான் இது. படத்தை முழுவதுமாக பார்க்கும்போது 'இது ஒரு சைக்கோ படமா' என்ற கேள்வியும் எழுகிறது. நீங்களும் படத்தை பார்த்துவிட்டு சொல்லுங்கள் இது சைக்கோ படமா இல்லையா என்று. 

முந்தைய படம்: உலகப் போர்கள் செய்த ஒரே நன்மை என்ன தெரியுமா? பக்கத்து தியேட்டர் #8

அடுத்தப் படம்: மதம் ஒரு போதை பொருள்...? மலையாள சினிமாவின் தைரியம்!!! பக்கத்து தியேட்டர் #10

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விருதுகளை பார்வைத்திறன் சவால் உள்ளவர்களுக்கு சமர்ப்பித்த 'சைக்கோ' படக்குழு 

Published on 01/04/2022 | Edited on 01/04/2022
psycho tamil movie

 

டபுள்மீனிங் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளியான ‘சைக்கோ’ படத்திற்கு, ‘2021ஆம் ஆண்டிற்கான சிறந்த இசையமைப்பாளர்’,‘ 2021ஆம் ஆண்டிற்கான சிறந்த பாடலாசிரியர்’, ‘2021ஆம் ஆண்டிற்கான சிறந்த பாடல்’ என மூன்று பிரிவுகளில் மிர்ச்சி மியூசிக் விருதுகள் வழங்கப்பட்டது.

 

மிர்ச்சி மியூசிக் நிறுவனம் ஆண்டுதோறும் தென்னிந்திய திரையிசையுலகில் வெவ்வேறு பிரிவுகளில் விருது வழங்கி திரைக்கலைஞர்களை கௌரவித்து வருகிறது. 2021ஆம் ஆண்டிற்கான சிறந்த இசையமைப்பாளர்’ என்ற விருது ‘சைக்கோ’ படத்திற்கு இசையமைத்ததற்காக ‘இசைஞானி இளையராஜாவுக்கும், 2021 ஆண்டிற்கான சிறந்த பாடலாசிரியர் என்ற விருது, ‘சைக்கோ’ படத்தில் இடம்பெற்ற ‘உன்ன நெனச்சு’ எனத் தொடங்கும் பாடலை எழுதியதற்காக பாடலாசிரியர் கபிலனுக்கும், 2021 ஆண்டிற்கான சிறந்த பாடல் என்ற விருது ‘சைக்கோ’ படத்தை தயாரித்த டபுள் மீனிங் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டது. 

 

சென்னையில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு, விருதினைப் பெற்ற படத்தின் தயாரிப்பாளரான அருண்மொழி மாணிக்கம், விருதை பார்வைத்திறன் சவாலுள்ளவர்களுக்கு சமர்பிப்பதாகத் தெரிவித்தார்.

 

டபுள்மீனிங் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2020ஆம் ஆண்டில் வெளியான சைக்கோ திரைப்படத்தில் நாயகன் உதயநிதி பார்வைத்திறன் சவால் உள்ளவராக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

மோடியுடன் மீண்டும் மோதும் அனுராக் காஷ்யப்! சோக்ட் : பைசா போல்தா ஹை... பக்கத்து தியேட்டர் #11

Published on 11/06/2020 | Edited on 11/06/2020
choked


பணம் பத்தும் செய்யும் என்ற பழமொழியை கேட்டிருப்போம். அதுபோல ஒரு வீட்டையும், நாட்டையும் பணம் என்ன செய்கிறது என்பதைத்தான் 'சோக்ட் : பைசா போல்தா ஹை' படம் விளக்குகிறது. ரொமான்ஸ், ஃபேமிலி, மசாலா என்று சென்றுகொண்டிருந்த பாலிவுட்டை உண்மையான வட இந்தியா, சாதாரண மக்கள் என்று சராசரி மனிதர்களின் வாழ்வியலை சினிமாத்தனத்துடன் படமாக்கி சர்வதேச அளவில் பிரபலமான அனுராக் காஷ்யப்தான் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். லாக்டவுன் சமயத்தில் எந்தத் திரையரங்கும் திறக்கப்படாத நிலையில் ரிலீஸுக்கு காத்திருந்த படங்கள் வேறுவழியின்றி ஓடிடியில் வெளியிடப்பட்டு வருகின்றன. ஆனால், அனுராக் காஷ்யப் டிஜிட்டல்தான் அடுத்த தலைமுறையினருக்கானது என்பதை முன்பே நன்கு அறிந்தவர், நெட்ஃப்ளிக்ஸின் சொத்தாகவே மாறிவிட்டார். இதுவரை இரண்டு குறும்படங்கள், ஒரு தொடர், தற்போது இந்த முழு நீளப்படம் என அவருடைய  நெட்ஃப்ளிக்ஸ் ஃபில்மோக்ராஃபி நீள்கிறது. மலையாள சினிமாவில் அறிமுகமாகி, தன்னுடைய நடிப்பால் அனுராக் காஷ்யப்பை கவர்ந்து பாலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார் நடிகர் ரோஷன் மேத்யூஸ். தெலுங்கு மற்றும் ஹிந்தியில் தலா ஒரு படம் மட்டுமே நடித்த ஷயாமி கெர் ஹீரோயினாக நடித்திருக்கிறார். 

இந்தியாவையே ஒரு உலுக்கு உலுக்கிய நாள் நவம்பர்  8 2016... 'டிமானிடைசேஷன்' என்ற வார்த்தை யாராலும் மறக்க முடியாதது. பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்பட்டு புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த காலகட்டத்தை பின்னணியாக வைத்து, மும்பையில் வாழும் மிடில் கிளாஸ் குடும்பத்துடன் பின்னப்பட்ட பணமதிப்பிழப்பு கதைதான் 'சோக்ட்' (chocked). சரிதா, வங்கி வேலைக்குச் சென்று கணவன் சுஷாந்த் மற்றும் குழந்தை ஆகிய  இருவரையும் கவனித்துக்கொள்ளும் பெண். சுஷாந்த், கடந்த ஐந்து வருடங்களில் ஒரு வேலையிலும் நிரந்தரமாக இல்லாத, குடும்ப கஷ்டத்தை உணராத அப்பா. சரிதாவுக்கு பெரிய பாடகியாக வேண்டும் என்ற கனவு இருந்துள்ளது. ஒரு முறை ஒரு பெரிய நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது கூடியிருந்த மக்களை பார்த்து வாயடைத்துப்போய் போட்டியை விட்டு வெளியேறுகிறாள். இது அவளுக்குள் ஒரு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துகிறது. தான் ஒரு தோல்வியடைந்தவள் என்கிற வருத்தம் ஒரு பக்கம், கணவனும் வீட்டின் கஷ்டத்தை  உணர்ந்து செயல்படவில்லை என்கிற விரக்தி ஒரு பக்கம்... மொத்தமாக பணம்தான் இவர்களுக்குத் தேவையான ஒன்றாக இருந்தபோது கிச்சன் சிங்க்கிலிருந்து வெளியாகும் சாக்கடையில் சுருள் சுருளாகப் பணம் வருகிறது. இதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் கதை!
 

choked


பெரும்பாலான மக்கள் 'இது நாட்டின் முன்னேற்றத்திற்காக' என்று நம்பி எவ்வளவு பெரிய சிரமம் என்றாலும் அதை ஏற்றுக்கொண்டு கியூவில் நின்றனர். ஆனால், கியூவில் நின்றவர்களுக்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பிருக்காது, அந்த இரவில் இடப்பட்ட அந்த திடீர் உத்தரவு இந்திய பொருளாதாரத்தை சோதித்துப் பார்க்கும் என்று. டிமானைடைசேஷன் காலத்தில் நடைபெற்ற அவலத்தை விட அதற்கு ஆதரவாக வந்த வாட்சப் பார்வேர்ட் மெசேஜ்களை தற்போது நினைத்துப் பார்க்கும்போதுதான் பலரும் கடும் கோபத்திற்கு ஆளாவோம். அந்தக் கோபம், கால் கடுக்க கியூவில் நின்று கடைசியாக வங்கிக்குள் நுழைகையில் 'பணம் இல்லை நாளைக்கு வாருங்கள்' என்று சொன்னதை நினைத்துப் பார்த்தால் கூட  வரவில்லை. அவ்வளவு நம்பிக்கை தந்து ஏமாற்றிய அந்த மெசேஜ்களை நினைத்தால் வலிக்கத்தானே செய்யும். அத்தனை வலியையும் சோகமாக சீரியசாக சொல்லும் படமாக அல்லாமல், வேறு சில கோணங்களையும் காட்டியிருக்கும் கற்பனை கதையுடன் களமிறங்கியிருக்கிறார் காஷ்யப்.

இந்தப் படத்தில் வரும் கதாபாத்திரங்கள் 15 பேர்தான் இருப்பார்கள். அதில் நான்கு பேரின் நடிப்பு அட்டகாசம். மிடில் கிளாஸ் குடும்பமாகவே வாழ்ந்த சரிதா, சுஷாந்த், இவர்களின் மகன் மற்றும் 'தாய்' என்று அழைக்கப்படும் பக்கத்து வீட்டுக்காரப் பெண். இந்த பாத்திரங்களில் நடித்தவர்களின் நடிப்பு அப்படியே மும்பை மனிதர்களை அப்பட்டமாக பிரதிபலிக்கிறது. அதுவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி டிமானிடைசேஷனை அறிவிப்பதை கேட்டவுடன் 'தாய்' கொடுக்கும் ரியாக்ஷனில் அவரது நடிப்பு புதுமையானது. கண்டிப்பாக பல மீம்களாக வலைத்தளத்தில் உலா வர வாய்ப்புள்ளது. நடிப்பிற்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறதோ அதே போல த்ரில்லிங்கான திரைக்கதை எழுத்தும், விமர்சனமாகவும் பிரச்சாரமாகவும் இல்லாமல் சுவாரசியமான திரைப்படமாக உருவாக வழிவகுத்துள்ளது. அந்த காலகட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பேச்சை கேட்டு  எழுதப்பட்டதுபோல வசனங்கள் இருக்கின்றன. நடந்ததை நடந்தபடியே, அதுவும் இந்த சினிமாவின் கதைக்கு என்ன தேவை இருந்ததோ அதை மட்டுமே படத்தில் வைத்திருக்கிறார் அனுராக். மசாலா படங்களில் மக்களை உணர்வுப்பூர்வமாகத் தூண்டுவதற்குப்  பயன்படுத்தும் சோஷியல் மெசேஜ் யுக்திகள் இல்லாமல் ரியலிசத்தை நம்பிப் பயணித்திருக்கிறது படம். வழக்கம்போல தொழில்நுட்பங்களிலும், கலை, இசை ஆகியவற்றில் திறமையாக செயல்பட்டிருக்கிறது அனுராக்கின் படக்குழு.

பல இடங்களில் ஆளும் அரசை, மோடியை நகைச்சுவையாக விமர்சித்திருக்கிறார்கள். ஆனால் அது 'ரா'வான அரசியலாக இல்லாமல் சுவாரசியமாக இருக்கிறது. படம் திரையரங்குகளில் வெளியாவதாக இருந்திருந்தால் சென்சார் போர்ட் இதை லாக் செய்து வைத்திருக்கும் வாய்ப்பு அதிகம். பெண்ணை மையமாக வைத்து நகரும் கதையை இந்தியாவில் நடைபெற்ற பெரும் நிகழ்வின் பின்னணியில் அரசியல் கலந்த த்ரில்லர் படமாக எடுத்ததன் மூலம் அனுராக் காஷ்யப், பேக் டு ஃபார்ம்... 
 

முந்தைய படம்: மதம் ஒரு போதை பொருள்...? மலையாள சினிமாவின் தைரியம்!!! பக்கத்து தியேட்டர் #10