இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு ‘மாநாடு’ படத்தில் நடித்துள்ளார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பை நிறைவுசெய்த படக்குழு, வரும் நவம்பர் 25ஆம் தேதி ‘மாநாடு’ படத்தை திரையரங்கில் வெளியிடவுள்ளது.
இதனிடையே, தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பாக சமீபத்தில், பள்ளி கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்ட பொது இடங்களுக்குச் செல்லும்போது கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என்ற புதிய விதிமுறையை அமல்படுத்தியது. இதனால், திரையரங்குகளுக்குச் செல்பவர்களுக்கு கரோனா சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘மாநாடு’ படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோளை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்..,
"வணக்கம், திரைத்துறை வெகுநாட்களாக நலிந்துவிட்டது. படங்களை வீட்டிலிருந்தே பார்க்கும் முறை பிறந்ததிலிருந்து திரையரங்கங்கள் வெறிச்சோடத் துவங்கிவிட்டன. அதிலிருந்து மீண்டு வர பெரிய படங்களே உதவுகின்றன. 'அண்ணாத்தே' மக்களை திரையரங்கிற்கு வரவைத்தது. ஐம்பது விழுக்காடு இருக்கை ஆக்கிரமிப்பு என்ற நிலையை மாற்றி நூறு சதவீத இருக்கை ஆக்கிரமிப்பை தந்தது திரைத்துறையினருக்கு நெஞ்சில் பால் வார்த்தது. அனைவரும் தங்களின் அனுமதியை தொழில் செய்யும் வெகுமதியாகப் பார்த்தோம் நன்றியோடு. ஆனால், இப்போது வேக்சினேசன் செலுத்தினால் மட்டுமே திரையரங்க அனுமதி என்பது அத்தனை திரைத்துறையினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுக்க தடுப்பூசி இன்னும் கட்டாயமாக்கப்படவில்லை. பதினெட்டு வயதிற்கு கீழே உள்ளவர்களுக்கு இன்னும் தடுப்பூசியே கண்டுபிடிக்கவில்லை. அவர்கள் பள்ளிகளிலும் பொது இடங்களிலும் சென்று வர அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். உங்கள் ஆட்சியில் வேக்சினேசன் சிறப்பாகவே நடைபெற்று வருகிறது. நோய்த் தொற்றும் கட்டுக்குள் வந்துள்ளது. முகக்கவசம், சானிடைசர் போன்றவற்றால் தங்களை பாதுகாத்தே வருகின்றனர் மக்கள். தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே திரையரங்கங்களில் அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவு திரைத்துறையை வெகுவாகப் பாதிக்கும். ஆன்டிராய்டு போன் இல்லாதவர்கள் கூட படத்திற்கு வருவார்கள். அவர்களை சர்டிபிகேட் எடுத்து வரச் சொன்னால் திரையரங்கம் வருவதை அவர்கள் தவிர்ப்பார்கள், அதுவும் திரையரங்கம் வந்து திருப்பி அனுப்பினால் அவர்கள் மீண்டும் திரையரங்குகளின் பக்கமே வரமாட்டார்கள். தயவுகூர்ந்து 18 வயதிற்கு கீழே உள்ளவர்கள் அனுமதிக்கப்படுவது போல விரைவில் தடுப்பூசி போட இருப்பவர்களையும் அனுமதித்து திரைத்துறையை வாழ வைக்க வேண்டுகிறோம். விரைந்து முடிவெடுத்து நம் திரையுலகையும்.. திரையரங்க அதிபர்களையும் காக்க வேண்டுகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.