ADVERTISEMENT

லதா ரஜினிகாந்த்துக்கு எதிரான மோசடி வழக்கு - நீதிமன்றம் புது உத்தரவு

06:15 PM Oct 11, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த 2014 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் செளந்தர்யா இயக்கத்தில் வெளியான படம் 'கோச்சடையான்'. இப்படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் 'மீடியா ஒன் எண்டர்டெயிண்மெண்ட்' நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனத்தைச் சேர்ந்த முரளி என்பவர் கோச்சடையான் படத்திற்காக 'ஆட் பீரோ' நிறுவனத்தைச் சேர்ந்த அபிர்சந்த் நஹாவர் என்பவரிடம் ரூ.6.2 கோடி கடன் பெற்றிருந்தார். இந்தக் கடன் தொடர்பாக முரளி தாக்கல் செய்த ஆவணங்களுக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதக் கையொப்பம் செய்திருந்தார்.

பின்பு முரளி கடனாகப் பெற்ற பணத்தைத் திருப்பித் தராததால் முரளி மற்றும் லதா ரஜினிகாந்த் மீது கடந்த 2015 ஆம் ஆண்டு பெங்களூரு மாநகர 6வது கூடுதல் முதன்மை நீதிமன்றத்தில் அபிர்சந்த் நஹாவர் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த அல்சூர் கேட் போலீஸார், லதா ரஜினிகாந்த் மீது இந்திய தண்டனை சட்டம் 196,199, 420, 463 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அந்த குற்றப்பத்திரிகையில் தன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக்கோரி லதா ரஜினிகாந்த் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், லதா ரஜினிகாந்த் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளில் 196, 199, 420 உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கப்படவில்லை எனக் கூறி அவர் மீது இருந்த 3 பிரிவுகளும் ரத்து செய்யப்பட்டன. மேலும் அவர் மீதான 463 பிரிவு குறித்து கீழமை நீதிமன்றம் விசாரிக்கலாம் என உத்தரவிட்டது. இதனையடுத்து லதா ரஜினிகாந்த் சார்பில் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மற்றும் தனக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை முழுமையாக ரத்து செய்யக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிமன்றம் லதா ரஜினிகாந்துக்கு எதிரான இந்த மோசடி வழக்கை தொடர்ந்து பெங்களூரு நீதிமன்றத்திற்கு விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது. மேலும் மோசடி வழக்கில் விடுவிக்கக் கோரி பெங்களூரு நீதிமன்றத்தில் லதா ரஜினிகாந்த் மனுத் தாக்கல் செய்துகொள்ளலாம் என்றும், விசாரணைக்கு நீதிமன்றம் கேட்கும் பட்சத்தில் லதா ரஜினிகாந்த் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. அதோடு மத்தியஸ்தர்கள் மூலம் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க இரு தரப்பினருக்கும் அனுமதியளிக்கப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT