திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடரை இயக்கியுள்ள கிருத்திகா உதயநிதி, தற்போது ஆல்பம் பாடல் ஒன்றை இயக்கியுள்ளார். இந்த ஆல்பம் இளையராஜா இசையில் யுவன் ஷங்கர் ராஜா குரலில் பா.விஜய் வரிகளில் உருவாகியுள்ளது. 'யார் இந்த பேய்கள்' என்ற தலைப்பில் உருவாகியுள்ள இந்த ஆல்பம் பாடல் நேற்று மாலை வெளியாகி தற்போது பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.
இப்பாடல் குழந்தைகள் வன்கொடுமைகளுக்கு உள்ளாவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்த பாடல் தொடர்பாக இதில் பணியாற்றிய கலைஞர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் கிருத்திகா உதயநிதி. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இளையராஜா, சந்தோஷ் சிவன், யுவன் ஷங்கர் ராஜா, பா.ரஞ்சித் ஆகியோருடன் பணிபுரிந்ததில் மகிழ்ச்சியடைகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில், "எத்தனையோ குழந்தைகள் கொடுமைகளுக்கு உள்ளாவதைக் கேள்விப்படுகிறோம். அமைச்சர் அன்பில் மகேஷ் சிறுவர் பாலியல் வன்கொடுமைகள் குறித்து வீடியோ எடுக்குமாறு என்னிடம் கோரிக்கை விடுத்திருந்தார்" எனப் பதிவிட்டுள்ளார்.