அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள சாணிக்காயிதம் திரைப்படம் மே 6ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தில் நடித்த அனுபவத்தை நடிகை கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ளார்.
சாணிக்காயிதம் படம் குறித்து கீர்த்தி சுரேஷ் கூறியதாவது, "இனிமையான, வசீகரமான கதாபாத்திரங்களில் நடித்த என்னை, பொன்னி கதாபாத்திரத்திற்காக மிகவும் முரட்டுத்தனமான, ரத்தமும் சதையும் நிறைந்த நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று இயக்குநர் கூறினர். அதுபோக, இந்த கதாபாத்திரத்திற்காக ஒல்லியாக வேண்டும் என்றும் கூறினர். முன் தயாரிப்பு விஷயத்தில் உண்மையில் நான் ஒன்றும் செய்யவில்லை என்றுதான் நினைக்கிறேன். நான் அந்த உடையை அணிந்து மேக்கப்பை போட்டுக்கொண்டு செட்டுக்கு சென்றதும் வேனில் ஏறி நின்று அருண் மற்றும் செல்வா சாரை பார்த்த நிமிடம் கதாபாத்திரத்திற்கு ரெடியாகி விட்டேன். இவ்வளவு ஆழமான அழுத்தமான ஒரு படத்தில் நான் இருப்பேன் என்பதை கற்பனை செய்துகூட பார்த்ததில்லை. ஆரம்பத்தில் இந்த படம் கடினமானதாக இருந்தது. ஆனால் கதை முன்னேறிச் செல்ல செல்ல பொன்னி கேரக்டரில் நடிப்பது எளிதாகிவிட்டது. என்னை மேம்படுத்துவதற்கும் பரிசோதனை செய்வதற்கும் முழுச்சுதந்திரம் கிடைத்த இப்படம் மிகச்சிறந்த அனுபவம்". இவ்வாறு கீர்த்தி சுரேஷ் தெரிவித்தார்.