Skip to main content

கீர்த்தி சுரேஷ் புகைப்படத்தை வைத்து லட்சக் கணக்கில் பண மோசடி; ஆசையால் மோசம் போன இளைஞர்

Published on 02/12/2022 | Edited on 02/12/2022

 

using keerthy suresh photo as dp women fooled a boy over 40lakh rupees in karnataka

 

சமீபகாலமாக ஆன்லைன் மூலம் பண மோசடி செய்யும் சம்பவம் அதிகரித்து வருகிறது. அதற்கு மற்றொரு சான்றாக தற்போது கர்நாடகாவில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. கர்நாடகா மாநிலம், விஜய்ப்பூர் மாவட்டத்தைச் சார்ந்தவர் இளைஞர் பரசுராமன். இவர் ஹைதராபாத்தில் கட்டடத் தொழிலாளர்களின் மேற்பார்வையாளராக பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் அரசுப் பணிகள் தொடர்பான தேர்வுக்கும் படித்து வருகிறாராம். 

 

இதனிடையே பரசுராமனுக்கு ஃபேஸ்புக்கின் மூலம் நடிகை கீர்த்தி சுரேஷ் புகைப்படம் கொண்ட ஒரு ஐடியிலிருந்து ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் வந்திருக்கிறது. ஆனால் முகப்பு பக்கத்தில் இருப்பது நடிகை கீர்த்தி சுரேஷ் என்பது பரசுராமனுக்கு தெரியவில்லை. வேறொரு பெண் தன்னுடன் நட்பாக வேண்டும் என எண்ணுவதாக நினைத்து அவரின் ரெக்வெஸ்ட்டை ஏற்றுக்கொண்டுள்ளார். பின்பு இருவரும் நன்கு பழகி வந்துள்ளனர். பிறகு அந்த ஐடியிலிருந்து பரசுராமனின் வாட்ஸ் அப் நம்பரை கேட்க, அவரும் கொடுத்துள்ளார். வாட்ஸ் அப்பில் சாட் செய்த பிறகு இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. ஒருவரையொருவர் நேரில் பார்க்காமலே காதலித்து வந்துள்ளனர். 

 

தான் ஒரு கல்லூரி படிக்கும் இளம்பெண் என்றும், தன் படிப்பிற்காக உதவி செய்யுங்கள் என்றும் அந்தக் காதலி கேட்க, தன் காதலி கேட்பதால் பணம் கொடுத்துள்ளார் பரசுராமன். இதனைத் தொடர்ந்து அடிக்கடி அந்தக் காதலி சில காரணங்களால் பணம் கேட்க மனதுக்கு விருப்பமான பெண்ணுக்குத்தானே கொடுக்கிறோம் என பரசுராமனும் தந்துள்ளார். ஒருநாள் பரசுராமனிடம் அந்தக் காதலி, ஆசை வார்த்தை பேசி நிர்வாணமாக குளிக்கும் வீடியோ அனுப்ப சொல்லிக் கேட்டுள்ளார். உடனே பரசுராமனும் அனுப்ப அந்த வீடியோவை அந்தக் காதலி ரெக்கார்ட் செய்து வைத்துக் கொண்டுள்ளார். 

 

இதையடுத்து அந்த வீடியோவை வைத்து அந்தக் காதலி பரசுராமனை பிளாக் மெயில் செய்யத் தொடங்கியுள்ளார். அப்போதுதான் பரசுராமனுக்கு தான் தவறு செய்ததை உணரத் தொடங்கியுள்ளார். தொடர்ந்து அந்தக் காதலி பிளாக் மெயில் செய்ய, சுதாரித்துக்கொண்ட பரசுராமன், கடந்த மாதம் 15-ம் தேதி இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த சைபர் பிரிவு போலீசார் விசாரணையைத் தொடங்கினர். விசாரணையில் அந்தக் காதலி ஹசன் மாவட்டத்தின் தசராளி கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுளா என்பதும் அவர் ஆன்லைன் மூலம் தொடர்ந்து பண மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது. 

 

மேலும் மஞ்சுளா ஏற்கனவே திருமணமாகி குழந்தை பெற்றவர் என்றும் இந்த பண மோசடிக்கு மஞ்சுளாவின் கணவரும் உடந்தையாக இருந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த பண மோசடியில், சுமார் 40 லட்சம் ரூபாய் பணம் பறித்துள்ள மஞ்சுளா அதை வைத்து 100 கிராம் தங்கம், ஹூண்டாய் கார், பைக் என பொருள்களை வாங்கியுள்ளார். அதோடு வீடு ஒன்றையும் கட்ட ஆரம்பித்துள்ளார். மஞ்சுளாவை கைது செய்துள்ள போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மஞ்சுளாவின் கணவர் தலைமறைவாக இருப்பதாகவும் அவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எனது இறுதிச்சடங்கிற்காவது வாருங்கள்” - கார்கே பேச்சு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Karke emotional speech at karnataka for lok sabha election

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளில் நாளை (26-04-24) நடைபெறவிருக்கிறது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. அதில் கர்நாடகா மாநிலம், கலபுர்கி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக, காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மருமகன் ராதாகிருஷ்ண தொட்டாமணி போட்டியிடுகிறார்.

அதன்படி, காங்கிரஸ் சார்பில் அப்சல்பூர் பகுதியில் நேற்று நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ண தொட்டாமணியை ஆதரித்து மல்லிகார்ஜுன கார்கே வாக்கு சேகரித்து பேசினார். அப்போது அவர், “மக்கள் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்கவில்லை என்றால், கலபுர்கியில் தனக்கு இடமில்லை என்று அவர் கருதுவார். இந்த முறை காங்கிரஸ் வேட்பாளருக்கு நீங்கள் வாக்களிக்கவில்லை என்றால், எனக்கு இங்கு இடமில்லை, உங்கள் இதயத்தை என்னால் வெல்ல முடியாது என்று நினைப்பேன். 

காங்கிரஸுக்கு உங்கள் வாக்கு கிடைக்கலாம் அல்லது கிடைக்காவிட்டாலும், என்னுடைய நல்ல செயல்களை நினைவுகூர்ந்து என் இறுதிச் சடங்கிற்கு வாருங்கள். தகனம் செய்தால் மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்கவும் அல்லது புதைக்கப்பட்டால் மண்ணை வழங்கவும். எனது இறுதி ஊர்வலத்தின் போது அதிகமான மக்கள் குவிந்தால் நான் சில நல்ல செயல்களைச் செய்துள்ளேன் என்பதை மற்றவர்கள் உணர்வார்கள். உங்கள் வாக்கு வீண் போகக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். 

கலபுர்கி மக்கள் அவர்களுக்கு பதிலளிக்க மாட்டார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். துரதிர்ஷ்டவசமாக, கடந்த தேர்தலில் நான் தோல்வியை சந்தித்தேன். எம்.பி., அமைச்சராக இருந்து நான் செய்த வளர்ச்சிப் பணிகள் உங்களுக்குத் தெரியும். மீண்டும் காங்கிரஸ் கட்சி தோற்றால் உங்கள் இதயத்தில் எனக்கென்று இடமில்லை என்று கருதுகிறேன். நான் அரசியலுக்காக பிறந்தவன். நான் தேர்தலில் போட்டியிடுகிறேனோ, இல்லையோ, இந்த நாட்டின் அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற எனது கடைசி மூச்சு வரை பாடுபடுவேன். அரசியலில் இருந்து ஓய்வு பெற மாட்டேன்” என்று கூறினார். 

Next Story

பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி சரமாரி பதிலடி!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Priyanka Gandhi hits back at Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

 Priyanka Gandhi hits back at Prime Minister Modi

இந்நிலையில் தாலி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரதமர் மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சரமாரி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுகூட்டத்தில் அவர் பேசுகையில், “கடந்த 2 நாட்களாக காங்கிரஸ் கட்சி உங்களிடமிருந்து உங்கள் தாலியையும் தங்கத்தையும் பறிக்க விரும்புவதாக சிலர் கூறுகின்றனர். மங்கள சூத்திரத்தின் முக்கியத்துவத்தை மோடி புரிந்துகொண்டிருந்தால் இதுபோன்ற விஷயங்களை அவர் கூறியிருக்கமாட்டார். நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. 55 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்தது. அப்போது உங்கள் தங்கமான மங்களசூத்திரத்தை யாராவது பறித்துச் சென்றார்களா?.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது எனது சகோதரிகள் தங்களுடைய மங்களசூத்திரங்களை அடமானம் வைக்க நேரிட்டபோது பிரதமர் எங்கே இருந்தார்?. விவசாயிகள் போராட்டத்தின் போது சுமார் 600 விவசாயிகள் வீரமரணம் அடைந்தபோது, அவர்களின் விதவைகளின் மங்களசூத்திரங்களைப் பற்றி அவர் நினைத்தாரா?. நாடு போரில் ஈடுபட்ட போது, எனது பாட்டி இந்திரா காந்தி தனது மங்களசூத்திரம் மற்றும் நகைகளை நன்கொடையாக வழங்கினார். மணிப்பூரில் ஆடையின்றி பெண்கள் இழுத்துச் செல்லபட்ட போது, அவர்களின் தாலி குறித்துதான் கவலைப்பட்டாரா?. என் அம்மா தனது தாலியை தேசத்திற்காகத் தியாகம் செய்தார். இது போன்று இந்த நாட்டிற்காக லட்சக்கணக்கான பெண்கள் தங்கள் மங்களசூத்திரத்தை தியாகம் செய்தனர்” எனப் பதிலடி கொடுத்துள்ளார்.

அதே சமயம் கடந்த 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய - சீனப் போரின்போது இந்திரா காந்தி தனது நகைகளை தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்கிய புகைப்படம் என ஒன்றை சமூக வலைத்தளத்தில் காங்கிரஸ் தரப்பினர் பகிர்ந்து வருகின்றனர். அதில், “மக்களின் சொத்துகளை காங்கிரஸ் கைக்கொள்ளும் என்று மோடி விமர்சிக்கிறார். ஆனால் நிஜத்தில் காங்கிரஸ் தலைவர்கள் நாட்டுக்காக தங்கள் சொத்துகளை வழங்கியவர்கள்” என குறிப்பிட்டுள்ளனர்.