ADVERTISEMENT

"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு!" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்  

01:13 PM May 20, 2019 | santhoshb@nakk…

பிரபல நடிகரும், இயக்குனருமான ஆர்.பார்த்திபன் இயக்கத்தில் அவரது நடிப்பில் உருவாகியுள்ள 'ஒத்த செருப்பு சைஸ் 7' திரைப்பட இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இந்த விழாவில் உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன், இயக்குனர்கள் பாக்யராஜ், ஷங்கர் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள், இயக்குனர்கள் பங்கேற்றனர். அப்போது விழாவில் பேசிய பாக்யராஜ்...

ADVERTISEMENT


ADVERTISEMENT


"இந்த விழாவைப் பொறுத்தவரை ஆர்.பார்த்திபனை விட எனக்குத்தான் இரட்டிப்பு மகிழ்ச்சி, பெருமை. அதற்கு என்ன காரணம் என்றால் பார்த்திபன் என்னுடைய சிஷ்யன். அதே போல் பார்த்திபன் எனக்கு சிஷ்யன் மட்டுமில்லை, சில விஷயங்களில் குருவை மிஞ்சிய சிஷ்யனாகவும் இருக்கிறார். எல்லாத்தையும் விட சிறப்பானது உலக நாயகன் இந்த விழாவில் பங்கேற்றது" என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து தான் உதவி இயக்குனராக பணிபுரிந்த முதல் படமான 16 வயதினிலே மற்றும் சின்ன வீடு திரைப்படம் தொடர்பான கருத்துக்களை பகிர்ந்துகொண்ட பாக்யராஜ், "16 வயதினிலே படத்தில் ஒரு காட்சியில் சந்தைக்குப் போய்ட்டு வருவார் கமல். அப்போது அமைதியாக நடந்து வருமாறு காட்சி அமைத்திருந்தார் எங்க டைரக்டர் (பாரதிராஜா). நான் தனியா கமல்கிட்ட போயி ஒரு பாட்டு சொல்லி அதை பாடிகிட்டே நடந்து வர சொன்னேன். இது டைரக்டருக்கும் தெரியாது. ஆக்ஷன் சொல்லி, கமல் நடந்து வந்தார். "ஆத்தோரமா ஊர்கோலமா மாப்பிள்ளை பொண்ணு, அதை பாத்துப்பாத்து ஏங்குதம்மா முண்டச்சி கண்ணு" என கமல் பாடிக்கொண்டே நடந்து வருவதைப் பார்த்த டைரக்டர், என்னிடம் வந்து "டேய்... என்னடா இது" என்று கேட்டார். கமல், "இவர்தான் இப்படி பாடிக்கிட்டே வரச்சொன்னார்" என்று சொல்லிட்டார். டைரக்டரும் அது நல்லா இருந்தனால படத்துல வச்சுட்டார்" என்று கூறி அந்தப் பாடலை மேடையில் பாட, கமல்ஹாசன் உட்பட அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர்.



மேலும் பேசிய அவர் தன்னிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த பார்த்திபன் தான் உறங்கும்போது கூட திரைப்படத்தில் வேறு என்ன செய்யலாம் என்பது குறித்து சிந்தித்துக் கொண்டிருப்பார் என கூறினார். அத்தகைய மிகச்சிறப்பான இயக்குனர் பார்த்திபன் எனவும் இந்தத் திரைப்படம் மிகச் சிறப்பான வெற்றியடையும் எனவும் கூறி நம்பிக்கை தெரிவித்தார். அதே போல் உதவி இயக்குனர்கள் அனைவரும் தங்களை இயக்குனர்களாகக் கருதி திரைப்படத்தில் கவனம் செலுத்தினால், அவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என இளம் இயக்குனர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பேசினார். அப்படி எனக்குக் கிடைத்த ஒரு உதவி இயக்குனர்தான் பார்த்திபன் என கூறி விடைபெற்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT