மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான 'கர்ணன்' திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. அத்தோடு மட்டுமில்லாமல், ரசிகர்கள், திரைத்துறை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
இந்த நிலையில், கர்ணன் திரைப்படத்தினை வெகுவாகப் பாராட்டி இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் ஒரு ட்விட்டர் பதிவினை வெளியிட்டுள்ளார். அப்பதிவில், "கர்ணன் பேசும் உண்மை, மிகுந்த வலி தருகிறது. ஒட்டு மொத்த படக்குழுவினருக்கும் பாராட்டுகள். ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரும், படத்தொகுப்பாளர் செல்வாவும், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் மாரி செல்வராஜின் எழுத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். நம்மிடம் காட்ட இன்னும் எவ்வளவு வைத்துள்ளார் என தனுஷின் நடிப்பு நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. நடிப்பு கர்ணா" எனக் குறிப்பிட்டுள்ளார்.