மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவான ‘கர்ணன்’ திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியானது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு, மாரி செல்வராஜின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. மாரி செல்வராஜ் அடுத்ததாக நீலம் ப்ரொடக்சன்ஸ் தயாரிப்பில், த்ருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார்.
இந்த நிலையில், மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தான் நடிக்க இருப்பதாக நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "‘கர்ணன்’ படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியையடுத்து, மாரி செல்வராஜுடன் மீண்டும் கைகோர்ப்பது குறித்த அறிவிப்பை வெளியிடுவது மகிழ்ச்சியளிக்கிறது. படத்தின் முன்தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் மீண்டும் இணைந்திருப்பது இவ்விரு கலைஞர்களின் ரசிகர்களிடையே மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களிடையேயும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.