இதில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகும் படம் தனுஷின் 51வது படமாக உருவாகிறது. படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி பின்பு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பூஜை நடைபெற்றது. இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் பூஜையுடன் தொடங்கியது. அதன்படி திருப்பதியில் நடந்தபோது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதால் பரப்பரப்பானது. மேலும் அப்பகுதி மக்கள் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து, படப்பிடிப்பிற்கு தடை விதிக்கக் கோரி பாஜகவினர் திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து படப்பிடிப்பிற்காக வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து வேறொரு இடத்தில் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
இந்த நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் தற்போது வெளியாகியுள்ளது. குபேரா எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் டைட்டில் லுக் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தனுஷ் முடி கலைந்து, தாடியுடன் அழுக்கான வித்தியாசமான தோற்றத்தில் இடம்பெற்றுள்ளார். இது தற்போது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.