சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10- ஆம் தேதி வரை 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. சுமார் 187 நாடுகளைச் சேர்ந்த 2,000- க்கும் மேற்பட்ட வீரர்கள் போட்டியில் பங்கேற்க உள்ளனர். இதனையொட்டி பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாக்கப்பட்டுள்ள செஸ் ஒலிம்பியாட் பாடலின் டீசரை நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட்டின் முழு பாடலை இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் வெளியிட்டுள்ளார். இந்த பாடல் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதற்கு முன்பு கடந்த 15 ஆம் தேதி இப்பாடலின் டீசரை வெளியான போது, "செஸ் ஒலிம்பியாட் பாடலின் டீசரில் செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் விஸ்வநாதன் ஆனந்த் இல்லையா? திமுக அரசின் இந்த விளம்பரத்தில் எந்த பொருளும் இல்லை. வெறும் காட்சி மட்டும்தான். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயலிழந்து கிடக்கும் ஆட்சியின் மீது தனது கவனத்தை செலுத்தட்டும்." என்று பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது வெளியான முழு பாடலில் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் தொடங்கி, இந்தியாவில் இருந்து செஸ் விளையாட்டில் சாதித்த அனைவருக்கும் அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.