ADVERTISEMENT

"அந்த அறிவுகூட இல்லாமல் சில தயாரிப்பாளர்கள் அதைச் செய்தார்கள்..." ப்ளூ சட்டை மாறன் பேட்டி!

04:26 PM Sep 28, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

ப்ளூ சட்டை மாறன் இயக்கத்தில் மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்துள்ள படம் ஆன்டி இண்டியன். இப்படத்தின் அனைத்து பணிகளும் முன்னரே நிறைவடைந்துவிட்ட நிலையிலும், படத்திற்கு சென்சார் சான்றிதழ் தர தணிக்கை துறையினர் மறுத்ததால் இப்படத்தின் ரிலீஸில் சிக்கல் எழுந்தது. இதை எதிர்த்துப் படக்குழு நடத்திய சட்டப்போராட்டத்தைத் தொடர்ந்து, தற்போது படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்த இயக்குநர் ப்ளூ சட்டை மாறன், சென்சார் சான்றிதழ் பெறுவதில் இருந்த சிக்கல்கள் குறித்துப் பேசுகையில், "சென்னையில் தணிக்கைக் குழுவினருக்குப் படத்தைத் திரையிட்டுக் காட்டினோம். படத்தைப் பார்த்துவிட்டு எந்தக் காரணமும் சொல்லாமல் படத்திற்குச் சான்றிதழ் தர மறுத்துவிட்டனர். அதனைத் தொடர்ந்து, ரிவைசிங் கமிட்டிக்குப் படத்தை அனுப்ப முடிவு செய்தோம். அதில் முக்கிய உறுப்பினராக உள்ள நடிகை கவுதமி சென்னையில் இந்தப்படத்தைப் பார்ப்பார் எனக் கூறப்பட்ட நிலையில், அவருக்குப் பதிலாகப் பெங்களூரில் நாகபரணா என்பவர் தலைமையில் படத்தைப் பார்த்தனர். படம் பார்த்துவிட்டு படத்தில் 38 இடங்களில் கட் பண்ணவேண்டும் என்றும் அதற்கு ஒப்புக்கொண்டால் சான்றிதழ் தருகிறோம் என்றும் கூறினார்கள். அவர்கள் குறிப்பிட்ட 38 இடங்களில் உள்ள வசனங்கள், காட்சிகளை வெட்டினால் கிட்டத்தட்ட 200 கட்டுகள் விழும். அந்தப்படத்தை தியேட்டருக்கு கொண்டுவந்தால் படம் நிச்சயம் தோல்வியடையும். அதில் தயாரிப்பாளருக்கும் எனக்கும் உடன்பாடில்லை.

அதனால் அடுத்த முயற்சியாக ட்ரிபியூனலில் முறையிடுவது என முடிவெடுத்தோம். நாங்கள் படத்தைத் திரையிட ஏற்பாடு செய்திருந்த சமயத்தில்தான் அந்த அமைப்பு கலைக்கப்பட்டது. இறுதியாக ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையான நீதிமன்றத்தை நாடினோம். எங்களது தரப்பு நியாயங்களைக் கேட்ட நீதிமன்றம், தணிக்கை குழு மற்றும் ரிவைசிங் கமிட்டி என இரண்டு தரப்பிலும் எடுக்கப்பட்ட முடிவுகளை ரத்து செய்ய உத்தரவிட்டு, முறையான கட்டுகளுடன் கூடிய சான்றிதழை வழங்கவும் உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து படத்தைப் பார்த்த புதிய கமிட்டியினர் வெறும் மூன்றே இடங்களில் சிறிய திருத்தங்களை மட்டுமே செய்யவேண்டும் எனக் கூறி படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கினார்கள். சென்சாரின் கெடுபிடிகள் காரணமாக தரமான படங்களை எடுப்பவர்கள் பயந்து பயந்து படம் எடுக்கவேண்டியுள்ளது அதற்காக சென்சாரே வேண்டாம் என்று சொல்லவில்லை. இன்று சிறுவர்கள்கூட கையில் ஆண்ட்ராய்டு மொபைல் வைத்துக்கொண்டு கட்டுப்பாடின்றி பயன்படுத்துகின்றனர். அப்படி காலம் மாறிக்கொண்டே வரும் சூழ்நிலையில், அதற்கேற்ப சென்சார் விதிகளிலும் திருத்தம் கொண்டுவந்து அனைத்தையும் சட்டவரம்புக்குள் கொண்டுவர வேண்டியது அவசியம். இந்தப் படம் வெளிவரக்கூடாது என சென்சார் போர்டுக்கு சிலர் அழுத்தம் கொடுத்தனர். என் படத்திற்கு சென்சார் மறுக்கப்பட்டதை சில தயாரிப்பாளர்கள் கொண்டாடினார்கள். அது என் படமாக இருந்தால் சரி; மற்றொரு தயாரிப்பாளரின் படம் என்ற அறிவுகூட இல்லாமல் சோசியல் மீடியாவில் அதை கொண்டாடினார்கள். நாடே கெட்டாலும் பரவாயில்லை, நான் மட்டும் நன்றாக இருக்கவேண்டும் என நினைக்கின்ற சில சுயநல மனிதர்களை குறிக்கும் வகையில்தான் இந்த படத்திற்கு ஆன்டி இந்தியன் என்ற தலைப்பை வைத்துள்ளோம்" எனக் கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT