ADVERTISEMENT

கார் மீது தாக்குதல் ; காவல் நிலையத்தில் மீசை ராஜேந்திரன் புகார்

11:52 AM Jun 15, 2022 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

வில்லன் மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துப் பிரபலமானவர் மீசை ராஜேந்திரன். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். நெல்லை மாவட்டத்தில் உள்ள முக்கூடல் பகுதியில் இருக்கும் முத்துமாரியம்மன் கோவிலுக்கு இவர் அடிக்கடி சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். மேலும் அந்த கோவிலில் சில பேர் பணமோசடி செய்துள்ளதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்து பல்வேறு தீர்ப்புகளைப் பெற்றுத் தந்திருக்கிறார்.

மீசை ராஜேந்திரன் சில தினங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சிக்காகச் சொந்த ஊரான நெல்லைக்குச் சென்றார். இதனிடையே முக்கூடல் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலுக்கு குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த போது, அந்த கோவிலில் நீதிமன்ற தீர்ப்பை மீறி சிலர் புனரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளது தெரியவருகிறது. இந்த சம்பவம் குறித்து அங்கு இருந்தவர்களிடம் மீசை ராஜேந்திரன் கேட்டபோது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து முக்கூடல் காவல் நிலையத்தில், தன்னை தாக்க முயன்றதாகவும் மற்றும் நீதிமன்ற தீர்ப்பை மீறிச் செயல்பட்டதாகவும் கூறி புகார் அளித்துள்ளார்.

முக்கூடல் காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு தன் குடும்பத்துடன் காரில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார் மீசை ராஜேந்திரன். அப்போது சொக்கலான்புரம் அருகே சிலர் வழிமறித்து காரின் பின்புற கண்ணாடியை கல்வீசி உடைத்துள்ளனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில், தன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்துள்ளார். ஏற்கனவே தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை. ஊருக்கு வரும்போது பிரச்னை வரும் என மதுரை உயர் நீதிமன்றத்தில் காவல் பாதுகாப்பிற்கு ஆணை வாங்கி உள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT