'கோமாளி' படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், அடுத்ததாக 'லவ் டுடே' படத்தை இயக்கி அதில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். கடந்த மாதம் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு வசூலிலும் கணிசமான தொகையை வசூலித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் ரூ.60 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், படத்தைப் பார்த்த திரைப்பிரபலங்கள் ரஜினி, சிம்பு, வசந்தபாலன் உள்ளிட்ட பலர் தங்களது வாழ்த்துகளைப் படக்குழுவிற்குத் தெரிவித்தனர். தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தெலுங்கில் அண்மையில் இப்படம் வெளியானது. அங்கேயும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று நல்ல வசூல் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் லவ் டுடே என்ற தலைப்பை உருவாக்கிய முதல் நபர் எனக் கூறி இயக்குநர் பாலசேகரனுக்கு நன்றி தெரிவித்தார்.
இந்நிலையில், இயக்குநர் அட்லீ 'லவ் டுடே' படத்தை பார்த்து படக்குழுவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "லவ் டுடே படம் ஒரு ஜாலி கலந்த பயணம். பிடித்திருந்தது. பிரதீப் ரங்கநாதன் மாஸ் ப்ரோ, கலக்கிட்டீங்க" எனக் குறிப்பிட்டு தயாரிப்பு நிறுவனம், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட படக்குழுவினர் பலரையும் பாராட்டியுள்ளார்.
அட்லீ தற்போது இந்தியில் நடிகர் ஷாருக்கானை வைத்து 'ஜவான்' படத்தை இயக்கி வருகிறார். இதற்கு முன்னதாக அட்லீ இயக்கத்தில் வெளியான விஜய்யின் 'பிகில்' படத்தை லவ் டுடே படத்தை தயாரித்த 'ஏஜிஎஸ்' நிறுவனம் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.