குக்-வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் அஷ்வின். இந்நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதில் அஷ்வின் - ஷிவாங்கி ஜோடிக்குப் பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இந்நிகழ்ச்சியில் அஷ்வினுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைத்துள்ளது. அந்தவகையில், தற்போது அறிமுக இயக்குநர் ஹரிஹரன் இயக்கும் 'என்ன சொல்ல போகிறாய்' படத்தில் அஷ்வின் நடித்துவருகிறார். அவந்திகா, தேஜஸ்வினி இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். படத்தின் படப்பிடிப்பு பணிகளை முடித்துள்ள படக்குழு, இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டிவருகிறது. இதைத்தொடர்ந்து 'என்ன சொல்ல போகிறாய்' படத்தின் டீசரைப் படக்குழு இன்று (10.11.2021) மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளது.
இந்நிலையில் நடிகர் அஷ்வின் படம் தொடர்பாக குரல்பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், "வணக்கம், எல்லாரும் நல்லா இருப்பீங்கன்னு நம்புறேன், பாதுகாப்பாக இருங்கள். என் முதல் படத்தின் டீசர் இன்று வெளியாகிறது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என் கனவின் முதல் படியாக இந்த டீசர் வெளியாக உள்ளது. இது எல்லாவற்றிற்கும் காரணம் நீங்கள்தான், உங்கள் அனைவருக்கும் நன்றி" என தெரிவித்துள்ளார். தற்போது இந்தப் பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.