பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படம் உருவாகுவதாக கடந்த 11ஆம் தேதி அறிவிப்பு வெளியானது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். இப்படத்தின் அறிவிப்பு வீடியோ பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.
அந்த வீடியோவில், பிரதீப் ரங்கநாதனும் அஷ்வத் மாரிமுத்துவும் நண்பர்கள் எனவும் இரண்டு பேரும் 10 வருடங்களுக்கு முன்பே இணைந்து படம் பண்ண ஆசைப்பட்டதாகவும் அந்த நினைவுகளைப் பகிரும் வகையில் அமைந்திருந்தது. மேலும் 10 வருடத்திற்கு முன்னால் எடுத்த ஃபோட்டோவை ரீ கிரியேட் செய்து அதே இடத்தில் தற்போது ஃபோட்டோ எடுத்து பகிர்ந்திருந்தனர்.
இந்த நிலையில் இப்படத்தில் சிம்பு முதலில் நடிக்கவிருந்து பின்பு பிரதீப் ரங்கநாதனுக்கு வந்துள்ளதாக ஒரு தகவல் உலா வந்து கொண்டிருந்தது. இத்தகவலை தற்போது இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மறுத்துள்ளார். “எல்லா சிம்பு ரசிகர்களுக்கும் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். சிம்பு சார் என்னை அழைத்து படத்தின் அறிவிப்பு வீடியோவை அவரது ஸ்டைலில் பாராட்டினார். ஓ மை கடவுளே படத்தின் போதும் முதல் ஆளாக அழைத்து ஒன்றரை மணி நேரம் பாராட்டினார். ஒரு விஷயத்தை தெளிவு படுத்த விரும்புகிறேன். அவருக்காக நான் எழுதிய ஸ்கிரிப்ட் வேறு. அவர் ரெடியாக இருக்கும் போது அப்படம் தொடங்கும்” என குறிப்பிட்டுள்ளார்.
அஷ்வத் மாரிமுத்து அவரது முதல் படமான ஓ மை கடவுளே படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அஷோக் செல்வன், ரிதிகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் 2020ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை அடுத்து தெலுங்கில் ஓ மை கடவுளே படத்தை ரீமேக் செய்தார். இதையடுத்து ப்ரதீப் ரங்கநாதன் படத்தை இயக்குகிறார்.