அருள் நிதி நடிப்பில் ராட்சஷி பட இயக்குநர் கௌதமராஜ் இயக்கத்தில் ஜெயந்தி அம்பேத் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'கழுவேத்தி மூர்க்கன்'. இப்படத்தில் கதாநாயகியாக துஷாரா விஜயன் நடிக்க முக்கியக் கதாபாத்திரத்தில் சந்தோஷ் பிரதாப், முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கிராமத்துப் பின்னணியில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.
கடந்த மாதம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. டீசரில் இம்மாதமான மே மாதம் வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் மே 26 ஆம் தேதி வெளியாவதாக அண்மையில் படக்குழு அறிவித்தது. மேலும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தமிழகத்தில் இப்படத்தை வெளியிடுகிறது.
இந்த நிலையில் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் ப்ரோமோஷன் பணிகளை கவனித்து வருகிறார்கள் படக்குழுவினர். அந்த வகையில் இப்படத்தின் புதிய போஸ்டரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் காவல்துறை சார்பில் தேடப்படும் குற்றவாளியாக அருள்நிதியின் கதாபாத்திரம் இடம்பெற்றுள்ளது. அவரை பற்றிய தகவல் தருபவருக்கு ரூ.10 லட்சம் சன்மானம் தருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக வெளியான இப்பட டீசரில் அருள்நிதி ஒருவரை கொலை செய்கிறார். போலீசார் ஒரு டீமை அமைத்து தேடுகின்றனர். அருள்நிதி என்ன காரணத்திற்காக கொலை செய்தார், போலீஸ் அவரை பிடித்ததா என்பதை விரிவாக சொல்லுவது போல் அமைந்துள்ளது. ஆக்ஷன் ட்ராமா ஜானரில் இப்படம் உருவாகியுள்ளது.