ADVERTISEMENT

எம்.ஆர்.ராதா பேரனிடமிருந்து ஒரு சர்ப்ரைஸ் அறிவிப்பு...

10:01 AM Jun 27, 2018 | vasanthbalakrishnan

'பயோபிக்' என்று சொல்லப்படுகிற ஒருவருடைய வாழ்வை சித்தரிக்கும் படங்கள்தான் தற்போது இந்தியா முழுக்க ட்ரெண்டிங். இந்தியில்தான் இது தொடங்கியது. மில்கா சிங், மேரி கோம்,தோனி இவற்றை தொடர்ந்து பேட்மேன், சூர்மா இப்படி பல பயோபிக்கள் வந்துகொண்டே இருக்கின்றன. சமீபகாலமாக தெற்கிலும் இந்தக் கலாச்சாரம் தொடங்கியிருக்கிறது.

ADVERTISEMENT



நடிகையர் திலகம், ட்ராஃபிக் ராமசாமி என்று இரண்டு பயோபிக் படங்களை தொடர்ந்து இன்னும் நிறைய பயோபிக் திரைப்படங்கள் வரப்போகிறதென்று தமிழ் சினிமா வட்டாரங்கள் முணுமுணுக்கிறது. அதை உறுதிப்படுத்துற மாதிரி இப்பொழுது ஒரு சூப்பரான செய்தி வந்திருக்கிறது.

நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களுடைய வாழ்க்கை திரைப்படமாகப் போகிறது. சில மாதங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் தனஞ்செயன் தன்னோட சமூக வலைத்தளத்தில் அடுத்து யாருடைய கதையை படமா பண்ணலாம்னு கேட்டு இருந்தார். அதுக்கு வந்த பதில்கள்லயே கூட நிறைய பேர் குறிப்பிட்டிருந்தது எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கையைதான்.

அத்தனை ரசிகர்களுடைய ஆசையையும் நிறைவேற்றுவது மாதிரி எம்.ஆர்.ராதாவுடைய வாழ்க்கை திரைப்படமாகப் போகிறது. இது பற்றிய ஒரு தகவலை எம்.ஆர்.ராதாவின் பேரன் இயக்குனர் ஐக் ராதா தன்னோட ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இவர் ஏற்கனவே 'சங்கிலி புங்கிலி கதவ தொற' படத்தை இயக்கியவர்.

ADVERTISEMENT


‘எம்.ஆர்.ராதாவை பார்த்ததில்லையென்றாலும் எப்பொழுதும் அவரை நினைவில் வைத்திருப்பவர்களுக்கு இந்தச் செய்தி. என்னோட தாத்தா, மேதை, நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் சொல்லப்படாத கதையை திரைப்படமாக சொல்லப் போறோம். ஒரு பேரனா, அதை விட முக்கியமா ஒரு ரசிகனா அவருக்கு நியாயம் செய்வேன்னு நம்புறேன். வேலைகள் போய்ட்டு இருக்கு’ னு ஐக் ராதா தெரிவித்திருக்கிறார்.



மெட்ராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன் என்று அழைக்கப்படும் எம்.ஆர்.ராதா 1907ஆம் ஆண்டு பிறந்தவர். நடிப்பு, அரசியலென்று பல தளங்களில் பயணித்தவர். சுயமரியாதை இயக்கத்தில் தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். தன்னோட நடிப்புத் திறமையால் பெரியாரால் நடிகவேள்னு பட்டம் சூட்டப் பெற்றவர். நாடக நடிகனாக தன்னுடைய வாழ்க்கையைத் துவங்கி, திரைப்பட நடிகனாகி, மீண்டும் நாடக மேடைக்கே திரும்பிய கலைஞர் எம்.ஆர்.ராதா.

எத்தனையோ புகழ் கிரீடங்கள் கிடைத்திருந்தாலும் நிறைய சர்ச்சைகளும் எம்.ஆர்.ராதாவை தொடர்ந்துகொண்டே இருந்தன. அதில் மிக முக்கியமானது 1967ல் நடந்த எம்.ஜி.ஆர் துப்பாக்கிச் சூடு வழக்கு. இப்போது வரை இந்த வழக்கை பல பேர் பல விதத்தில் விவரித்துக் கொண்டுதான் இருக்காங்க. ஆனாலும் என்ன நடந்ததென்ற குழப்பமும் தொடர்கிறது. ஐக் ராதாவின் ட்வீட்டில், எம்.ஆர்.ராதாவின் சொல்லப்படாத கதை சொல்லப்படுமென்று குறிப்பிட்டிருக்கிறார். நக்கீரன் இதழில் எம்.ஆர்.ராதாவின் மகன் நடிகர் ராதாரவி எழுதும் 'கர்ஜனை' தொடரில் பல சுவாரசியமான சம்பவங்களை பகிர்ந்தார். அதையும் தாண்டி எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கையில் இன்னும் பல பேசப்படாத பக்கங்கள் இருக்கின்றன. இந்த வழக்கு பற்றிய சொல்லப்படாத உண்மைகளும், எம்.ஆர்.ராதா வாழ்க்கை குறித்த வெளியே தெரியாத தகவல்களும் அதில் இருக்குமா என்று பார்க்கலாம்.


எம்.ஆர்.ராதாவின் பல வசனங்கள் இப்போது வரைக்கும் பல மீம்ஸ்களிலும், வீடியோக்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.அவர் வாழ்க்கையை படமாகப் பார்க்க இப்பொழுதே ஆர்வமாகத்தான் இருக்கிறது. சீக்கிரம் படமாக்கி கண்ல காட்டுங்கப்பா... வீ ஆர் வெயிட்டிங்...



ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT