மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ‘கர்ணன்’ திரைப்படம் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, படம் விமர்சன ரீதியாவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்றது. இப்படத்திற்கு கிடைத்த வெற்றியையடுத்து, மாரி செல்வராஜ் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தனுஷ் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், பிரபல பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல்.ராய், ‘கர்ணன்’ படத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "‘கர்ணன்’ திரைப்படம் பார்த்த அனுபவத்தைக் கூற வேண்டுமென்றால் அற்புதமாகவும் சிறப்பாகவும் இருந்தது எனலாம். மாரி செல்வராஜ் சிறந்த கதை சொல்லி. அவருடைய சிந்தனையை திரையில் கொண்டுவந்த விதம் அற்புதமாக இருந்தது. தனுஷ், நீங்கள் நடிகர் என நினைத்திருந்தேன். தான் ஒரு மேஜிக் கலைஞன் என்பதை என்னிடம் நீங்கள் சொல்லியிருக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ‘ராஞ்சனா’ திரைப்படத்தில் நடித்த தனுஷ், தற்போது அவரது இயக்கத்தில் உருவாகிவரும் ‘அத்ரங்கி ரே’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.