90-களில் ரஜினி, கமல், அஜித், விஜய் எனப் பல பிரபலங்களுடன் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரம்பா. கடந்த 2010 ஆம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் இந்திரன் பத்மநாதனைத் திருமணம் செய்து கொண்டு கனடாவிலேயே குடியேறினார். பின்பு கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து கேட்டு கோர்ட் வரை சென்றார். பிறகு சமாதானமாகி கருத்து வேறுபாடு நீங்கி தன் கணவருடன் தற்போது கனடாவில் வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும் 1 ஆண் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில், ரம்பா தனது சமூக வலைதளப் பக்கத்தில், தாங்கள் சென்று கொண்டிருந்த கார் சிறிது விபத்துக்குள்ளானதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பள்ளியிலிருந்து குழந்தைகளை அழைத்துக்கொண்டு செல்லும்போது எங்கள் கார் மீது மற்றொரு கார் மோதியது. இதில் நானும் எங்கள் குழந்தைகளும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பி பாதுகாப்பாக உள்ளோம். அதே சமயம் என்னுடைய குழந்தை சாஷா இன்னும் மருத்துவமனையில் இருக்கிறார். தயவுசெய்து எங்களுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்" எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.